பணத்தை கொடுத்து மக்களை வாங்க முடியாது: கோவை பிரச்சாரத்தில் டிடிவி தினகரன் கருத்து

பணத்தை கொடுத்து மக்களை வாங்க முடியாது: கோவை பிரச்சாரத்தில் டிடிவி தினகரன் கருத்து
Updated on
1 min read

கோவை, நீலகிரி மாவட்டங்களில் போட்டியிடும் அமமுக மற்றும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து கோவை சிவானந்தா காலனியில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன்பேசியதாவது: ஆளும்கட்சி கூட்டணி ஒரு துரோக கூட்டணி. திமுக கூட்டணி எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என துடித்துக்கொண்டிருக்கிறது.

நேர்மையான, வெளிப்படையான ஆட்சியை தமிழக மக்கள் விரும்புகின்றனர். 6 லட்சம் கோடிக்குமேல் கடனில் சிக்கி தமிழகம் தத்தளிக்கிறது. தமிழகத்தை தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்ற அமமுகவால்தான் முடியும். தேர்தல் அறிக்கையில்கூட ஏமாற்று வேலைகளை செய்கின்றனர்.

முதியோர் உதவித்தொகை கூட சரியாக அளிக்க முடியாத அதிமுக அரசு, மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1500 எப்படி அளிப்பார்கள். ஆட்சி அதிகாரம், பணபலம் இருந்தால் எதைவேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கின்றனர். பணத்தை கொடுத்து மக்களை வாங்க முடியாது. ஆட்சியை காப்பாற்றியது ராஜதந்திரம் என்கின்றனர். துரோகத்துக்கு பெயர் ராஜதந்திரமா?

அமமுக ஆட்சிக்கு வந்தால் கோவை விமானநிலையம் விரிவுபடுத்தப்படும். கோவை அரசுமருத்துவமனை மேம்படுத்தப்படும். கோவை மத்திய சிறைச்சாலையை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு, அந்த இடம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், அன்னூர்பகுதி மாணவர்கள் பயன்பெறும்வகையில் அரசு, கலைக்கல்லூரிஅமைக்கப்படும். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். பசுந்தேயிலைக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

திருப்பூர்

பல்லடம் அமமுக வேட்பாளர் ஜோதிமணி, திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளர் விசாலாட்சி, அவிநாசி தேமுதிக வேட்பாளர் மீரா, திருப்பூர் வடக்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் செல்வக்குமார், காங்கயம் வேட்பாளர் ரமேஷ் ஆகியோரை ஆதரித்து, பல்லடம் அருகே நேற்று இரவு நடைபெற்ற கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றகழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசும்போது, "ஆளும் கட்சி தொகுதிக்கு கோடிக்கணக்கில் பணத்தை இறக்குகிறார்கள். ரூ.50 கோடி முதலீடு செய்து ரூ.5,000 கோடி சம்பாதிக்க நினைக்கிறார்கள். குளம், குட்டையை மட்டுமின்றி, கஜானாவையும் முதல்வர் பழனிசாமி தூர்வாரிவிட்டார்.

அதேநேரம், மு.க.ஸ்டாலின் 10 ஆண்டு கால பட்டினியில் உள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப் பஞ்சாயத்து, ரவுடித்தனம், நிலம் அபகரிப்பு என அனைத்தும் நடக்கும். ஒட்டுமொத்த தமிழகமும்சுடுகாடாகிவிடும். பெருச்சாளிகளை விரட்டுவதாக நினைத்துவிட்டு, பேய்களை உள்ளே விட வேண்டும். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆளும் கட்சி பணமூட்டையோடு அலைகிறார்கள். வாக்குக்கு பணம் கொடுப்பவர்களுக்கு, இந்த தேர்தலில் மரண அடி கொடுக்க வேண்டும். துரோகத்துக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். தீய சக்திகள் விரட்டியடிக்கப்பட வேண்டும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in