Published : 28 Mar 2021 03:17 AM
Last Updated : 28 Mar 2021 03:17 AM

ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு; கூடுதல் கட்டணம் திருப்பி வழங்கப்படும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது கூடுதலாக செலுத்திய கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்ட அறிவிப்பு விவரம்: நடப்பு ஆண்டு முதல் ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு வருடத்துக்கு 4 முறை நடத்தப்படவுள்ளது. அதன்படி பிப்ரவரி தொடங்கி மே மாதம் வரை 4 கட்ட தேர்வுகளை நடத்த முடிவானது.

இதற்கு மாணவர்கள் ஒட்டுமொத்தமாக 4 தேர்வுகள் அல்லது ஒவ்வொரு தேர்வுக்கு தனித்தனியாகவும் விண்ணப்பிக்க வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதேபோல், தேர்வுக் கட்டணம் செலுத்தவும் உரிய வழிமுறைகள் செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து தேர்வுக்கால அட்டவணையின்படி பிப்ரவரி, மார்ச் மாதத்துக்கான ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டன. தொடர்ந்து ஏப்ரல் மாத 3-ம் கட்ட தேர்வுக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது கணிசமான மாணவர்கள் தவறுதலாக கூடுதல் கட்டணம் செலுத்தியது தெரியவந்துள்ளது. அவ்வாறு கூடுதல் கட்டணம் செலுத்தியவர்கள் அனைவருக்கும் உரிய தொகை திருப்பி அளிக்கப்படும். எனினும், இதற்கான பணிகள் ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு முழுமையாக முடிக்கப்பட்டு பின்னர் தொடங்கப்படும்.

கூடுதல் விவரங்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் jeemain@nta.ac.in என்ற மின்னஞ்சல் அல்லது 011-40759000 தொலைபேசி எண் வழியாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதன்படி கூடுதலாக செலுத்தப்பட்ட கட்டணம் மாணவர்களுக்கு மே மாதம் இறுதிக்குள் திருப்பி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x