Published : 27 Mar 2021 08:52 PM
Last Updated : 27 Mar 2021 08:52 PM

மதுரையில் வாகனச் சோதனைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் தேர்தல் கண்காணிப்பு குழுக்கள்: சிக்கும் வியாபாரிகள்; தப்பிக்கும் வேட்பாளர்கள்

மதுரையில் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் சாலைகளில் நின்று கொண்டு வெறும் வாகனச்சோதனைக்கு மட்டுமே முக்கியத்துவமே கொடுப்பதால், வேட்பாளர்களையும், அவர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் நடக்கும் தேர்தல் விதிமீறல்களையும் கண்காணிக்க தவறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் விநியோகம் மற்றும் முறையற்ற பரிமாற்றங்களை கண்காணிப்பதற்காகவும், தடுப்பதற்காகவும் பறக்கும்படை (Flaying squad), நிலையான கண்காணிப்பு குழு (Static survial once Team), வேட்பாளர்கள் அனைத்து செலவினங்களையும் வீடியோ ஆய்வு செய்யும் குழு (Video Survial ance Team) போன்ற தேர்தல் கண்காணிப்பு குழுவினர் செயல்படுகின்றனர்.

இதில், பறக்கும் படை குழுவினர், சாலைகளில் செல்லும் வாகனங்களை சோதனை செய்து, பணம் மற்றும் பரிசுப்பொருட்களை கொண்டு வருகிறார்களா? என்று ஆய்வு செய்கிறார்கள்.

வீடியோ ஆய்வு செய்யும் குழு, வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யும் இடங்களுக்குக் கூட சென்று அவர்கள் பிரச்சாரங்களையும், அங்கு பணம், பொருள் எதுவும் வழங்கப்படுகிறதா? என்பதையும், தேர்தல் விதிமுறைகள் மீறப்படுறதா? என்றும் வீடியோ எடுத்து ஆய்வு செய்வார்கள்.

அதுபோல், நிலையான கண்காணிப்புகுழுவினர், முக்கியப் பிரச்சாரப் பகுதிகளில் நிலையாக நின்று அரசியல் கட்சியினர் நடவடிக்கைகளை கண்காணிப்பார்கள்.

மேலும், இவர்கள் அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாக்காளர்களை அனுகும்போது அவர்கள் எதுவும் பொருள், பணம் வழங்குகிறார்களா? என்றும் கண்காணிப்பாளர்கள். ஆனால், மதுரை மாவட்டத்தில் பறக்கும்படை குழுவினர்,

நிலையான கண்காணிப்புக் குழுவினர் தினமும் ஒவ்வொரு சாலைகளிலும் நின்று கொண்டு அந்த வழியாக வரும் இருச்சக்கர வாகன ஓட்டிகள், கார்கள், ஜீப்புகள், ஷேர் ஆட்டோக்கள், டாடா ஏஸ் போன்ற வாகனங்களை மட்டும் சோதனை செய்கின்றனர்.

அதில், வியாபாரிகள், பொதுமக்கள் அவசரக்கோலத்தில் தங்கள் அறியாமையால் எடுத்து செல்லும் பணத்தை மட்டும் பிடித்து தங்கள் பணியை இந்த தேர்தல் கண்காணிப்பு பணியை திறம்பட செய்கின்றனர்.

ஆனால், கிராமங்களில், நகர்ப்புறங்களில் வேட்பாளர்களுடன் செல்லும் வாகனங்களை ஆய்வு செய்வதில்லை என்றும், வேட்பாளர்கள் பிரச்சாரக் கூட்டங்களுக்கு திரட்டிவரப்படும் வாக்காளர்களுக்கு கட்சி நிர்வாகிகள் தினப்படியாக பணம் விநியோகம் செய்வதையும் அவர்கள் கண்காணிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவர்கள், சாலைகளில் பெயரளவுக்கு பொதுமக்கள், வியாபாரிகள் செல்லும் வாகனங்களை மட்டுமே விரட்டிப்பிடித்து சோதனை செய்கின்றனர்.

அரசியல் கட்சியினரை நெருங்கி ச்சென்று சோதனை செய்யாததால் வேட்பாளர்கள் செல்லும் இடங்களில் அவர்கள் கட்சியினர் தாராளமாக ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கும், ஒவ்வொரு பிரச்சாரக்கூட்டத்திற்கும் திரட்டிவரப்படும் வாக்காளர்களுக்கும் பணம் வழங்குகிறார்கள்.

அப்போது வேட்பாளர்களுடன் செல்பவர்கள், யாரும் வீடியோ எடுக்காதவாறு பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால், இந்த இடங்களில் தேர்தல் அதிகாரிகள் சென்று நேரடியாகவும், பொதுமக்களோடு மக்களாக சென்று கண்காணிக்க அதிகாரமும், உரிமையும் இருந்தும் அவர்கள் அங்கு சென்று அந்தப் பணியை செய்ய தயங்குவதாகக் கூறப்படுகிறது.

அதனால், மாவட்டத்தில் பண பலம் படைத்த முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தாராளமாக பிரச்சாரத்திற்கு வரும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடக்கிறது.

அப்படியே சென்றாலும் பெயரளவுக்கு சோதனை செய்துவிட்டு அவர்கள் பணம் வழங்கும்போது அங்கிருந்து சென்றுவிடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதனால், தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் வெறும் வாகனச் சோதனையில் மட்டுமே கவனம் செலுத்தாமல் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களுக்கும், அவர்கள் பணம், பரிசுப்பொருட்களைக் கடத்தும் வழிமுறைகளையும் போலீஸார் உதவியுடன் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதைவிட்டு சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களையும் நிறுத்திவைத்து சோதனை செய்து, போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுப்பது எந்த விதத்தில் நியாயம் என்று பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x