Published : 27 Mar 2021 05:49 PM
Last Updated : 27 Mar 2021 05:49 PM

செயற்கை தட்டுப்பாடு மூலம் விலை ஏற்றும் 9 முன்னணிக் கம்பி நிறுவனங்கள்; வழக்குப் பதிவு செய்யக் கோரி வழக்கு: சிபிஐக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் 

சென்னை

செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, இரும்புக் கம்பிகளை கூடுதல் விலைக்கு விற்பது தொடர்பாக 9 முன்னணி இரும்புக் கம்பி உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயம்புத்தூர் ஒப்பந்ததாரர்கள் சங்கம் தொடர்ந்துள்ள வழக்கில், கடந்த 6 மாதங்களாக இரும்புக் கம்பிகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், கம்பிகள் கிடைப்பதில் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருவதாகவும், அதைக் காரணம் காட்டி அதிக விலைக்குக் கம்பிகளை விற்பனை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

தங்களுக்குள் ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு, இரும்புக் கம்பி தயாரிக்கும் 9 முன்னணி நிறுவனங்களும், கூடுதல் விலைக்குக் கம்பிகளை விற்று சட்டவிரோத லாபம் ஈட்டி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

இதனால் கட்டுமானத் துறையில் உள்ள ஒப்பந்ததாரர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் பாதிக்கப்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ய சிபிஐயிடம் மார்ச் 6ஆம் தேதி மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தங்கள் புகார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, 2 வாரத்தில் பதிலளிக்கும்படி, சிபிஐக்கு உத்தரவிட்டு வழக்கைத் தள்ளிவைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x