Last Updated : 27 Mar, 2021 02:33 PM

 

Published : 27 Mar 2021 02:33 PM
Last Updated : 27 Mar 2021 02:33 PM

தஞ்சாவூர் வாக்குச்சாவடிகளுக்கு 15 வகையான கரோனா தடுப்பு உபகரணங்கள் அனுப்பி வைப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 2,886 வாக்குச்சாவடிகள் அனைத்துக்கும் 15 வகையான கரோனா தடுப்பு உபகரணங்கள் இன்று வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

ஏப்.6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு வருகிறது. எனவே தொற்று ஏற்படாத வகையில், வாக்காளர்கள் தேர்தல் நடைபெறும் நாளன்று அச்சமின்றி வாக்களிக்கத் தேவையான ஏற்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

அதன்படி ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் முகக்கவசங்கள், தெர்மல் ஸ்கேனர், ஒருமுறை உபயோகப்படுத்தும் கையுறை, பிபிகிட், சர்ஜிக்கல் மாஸ்க், சானிடைசைர் என 15 வகையான பொருட்களைத் தேர்தல் ஆணையம் மொத்தமாக வாங்கி மாவட்ட அளவில் இருப்பு வைத்திருந்தது. இதையடுத்து இந்தப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு, இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 பேரவைத் தொகுதிகளுக்கும் தஞ்சாவூர் அண்ணா கலையரங்கத்தில் இருந்து வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''கரோனா தொற்றுக் காலமாக இருப்பதால், தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தேர்தல் ஆணையம் இந்தப் பொருட்களை வழங்கியுள்ளது. அதன்படி 15 வகையான பொருட்கள் இன்று வாகனங்கள் மூலம் 8 பேரவைத் தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. அந்தந்தத் தொகுதியில் உள்ள குடோனில் இருப்பு வைக்கப்பட்டு, தேர்தல் முதல் நாள் வாக்குப்பெட்டிகளுடன் இந்த பொருட்களும் அனுப்பி வைக்கப்படும்.

கரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க ஏதுவாக அவர்களுக்கு 6-ம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பிபி கிட் உடை மற்றும் முகக்கவசம் போன்றவை அணிந்துவந்து வாக்களிக்கலாம். வாக்களித்த பின் அந்த உடைகளை உரிய பாதுகாப்போடு அதனை அகற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 2,886 வாக்குச் சாவடிகளுக்கும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களைக் கொண்டு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்'' என்று தெரிவித்தார்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஏ.பழனி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் பு.ஜானகி ரவீந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x