Published : 27 Mar 2021 02:26 PM
Last Updated : 27 Mar 2021 02:26 PM

எஃப்.ஐ.ஆரை இணையத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யவேண்டும்: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

முதல் தகவல் அறிக்கைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள், அவ்வாறு செய்யாவிட்டால் உடனடியாக பதிவேற்றி அது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பாலாஜி என்பவர் தாக்கல் செய்த மனுவில், சென்னை பெருநகர காவல் துறையில் சிபிசிஐடி மற்றும் சைபர் குற்றப் பிரிவில் பதிவு செய்யப்படும் வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை என்பதால், அவற்றை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது, முதல் தகவல் அறிக்கைகளை காவல் துறை அல்லது அரசு இணைய தளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், முதல் தகவல் அறிக்கைகளை இணைய தளங்களில் வெளியிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

இதுவரை உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி இருக்காவிட்டால், உடனடியாக அதை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை எட்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x