Published : 27 Mar 2021 01:40 PM
Last Updated : 27 Mar 2021 01:40 PM

பேராசிரியர் பதவி உயர்வுக்கு கூடுதல் தகுதி நிர்ணயம்; அண்ணா பல்கலை. சிண்டிகேட் தீர்மானத்தை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது: உயர் நீதிமன்றம்

இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பதவி உயர்வுக்கு கூடுதல் தகுதி நிர்ணயித்து அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மானத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பதவி உயர்வு பெற, இணை பேராசிரியர், முனைவர் பட்டம் பெற்ற மாணவருக்கு வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டும் எனவும், இணை பேராசிரியர் பதவி உயர்வு பெற, உதவிப் பேராசிரியர், முனைவர் படிப்பு மேற்கொள்ளும் மாணவருக்கு மேற்பார்வையாளராக இருக்க வேண்டும் எனவும் கூடுதல் தகுதியை நிர்ணயித்து, 2018-ம் ஆண்டு பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி, பதவி உயர்வு பெற விண்ணப்பித்து நேர்முகத் தேர்வில் கலந்துகொண்ட கணபதி, மலர்விழி உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த மனுக்களில், பதவி உயர்வுக்கான தேர்வு நடைமுறைகள் 2017-ம் ஆண்டு முடிவடைந்துவிட்ட நிலையில், 2018-ம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் தங்களுக்குப் பதவி உயர்வு மறுக்கக் கூடாது எனத் தெரிவித்திருந்தனர்.

ஆனால், கூடுதல் கல்வித் தகுதியை நிர்ணயிக்க பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் உள்ளதாக, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்குகளை இன்று (மார்ச் 27) விசாரித்த நீதிபதி பார்த்திபன், கூடுதல் கல்வித் தகுதியை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது என உத்தரவிட்டார்.

மேலும், தீர்மானம் நிறைவேற்றப்படும் முன் பதவி உயர்வுக்கான தேர்வு நடைமுறைகளில் கலந்து கொண்டவர்களுக்கு, அப்போது நடைமுறையில் இருந்த தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கி, நான்கு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x