Published : 27 Mar 2021 03:14 AM
Last Updated : 27 Mar 2021 03:14 AM

‘தேசிய வாக்காளர் பேரவை' என்ற பெயரில் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் வீடு வீடாகப் பிரச்சாரம் செய்யும் ஆர்.எஸ்.எஸ்.

'தேசிய வாக்காளர் பேரவை' என்ற பெயரில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் வீடு, வீடாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்கு இன்னும் 9 நாள்களே எஞ்சியிருக்கும் நிலையில் கரோனா அச்சம், கடும் வெயில் அனைத்தையும் கடந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக, திமுக, காங்கிரஸ் போன்ற முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளுக்காக தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். ஒவ்வொரு தேர்தலிலும் பணியாற்றுவது வழக்கம்.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் தேர்தல் பணிகள் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் சவாலை கடந்த காலங்களில் ஏற்படுத்தியுள்ளன. மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வலுவான அமைப்பாக இல்லாவிட்டாலும் தனது சக்திகேற்ப தேர்தல் பணியாற்றி வருகிறது.

தமிழகத்தில் பாஜக போட்டியிடும் விளவங்கோடு, குளச்சல், நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை வடக்கு, விருதுநகர், ராமநாத
புரம், காரைக்குடி, திட்டக்குடி (தனி), திருக்கோவிலூர், அரவக்குறிச்சி, மொடக்குறிச்சி, திருவண்ணாமலை, தாராபுரம் (தனி), திருவையாறு, கோவை தெற்கு, உதக மண்டலம், தளி, ஆயிரம் விளக்கு, துறைமுகம் ஆகிய 20 தொகுதிகளிலும் தேசிய வாக்காளர் பேரவை என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளது.

ஒவ்வொரு தொகுதிக்கும் ஆர்.எஸ்.எஸ். சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் தலைமையில் தொகுதிக்கு சுமார் 300 பேர் வீடு, வீடாகச் சென்று பாஜகவுக்கு வாக்களிக்குமாறு துண்டுப் பிரசுரங்கள் கொடுத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஒருவரிடம் விசாரித்தபோது, “தேர்தல் பணி ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு புதிதல்ல. பாஜக போட்டியிடும் தொகுதிகளில் வீடு, வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இப்பணிக்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 300-க்கும் அதிகமானோர் தன்னார்வலர்களாக வந்துள்ளனர். அவர்கள் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களின் வீடுகளிலேயே தங்கிக் கொள்வார்கள் என்பதால் செலவு என்பதே இருக்காது" என்றார்.

சென்னையில் பாஜக போட்டியிடும் ஆயிரம் விளக்கு, துறைமுகம் தொகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் வட சென்னை பகுதியில் ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் துறைமுகம் தொகுதியில் மட்டுமல்லாது ஆயிரம் விளக்கு தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ்.ஸின் இந்தப் பிரச்சாரம் திமுகவுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x