Last Updated : 27 Mar, 2021 03:14 AM

 

Published : 27 Mar 2021 03:14 AM
Last Updated : 27 Mar 2021 03:14 AM

களப் பணி தீவிரம் கூடுதல் சிரத்தை காட்டும் மேலிடம்: புதுவையில் வெற்றிக் கணக்கைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக

புதுச்சேரியில் இதுவரை 13 தேர்தல்கள் நடந்துள்ளன. கடந்த 1964, 1985, 1991, 2001, 2006, 2016 என 6 முறை காங்கிரஸ் ஆட்சியை அதிகளவாக அமைத்துள்ளது. திமுக கடந்த 1969, 1980, 1990, 1996 ஆகிய நான்கு முறை ஆட்சியை பிடித்துள்ளது. அதிமுக 1974, 1977ல் ஆட்சியமைத்தது. கடந்த 2011ல் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

புதுச்சேரியில் இதுவரை நடந்த தேர்தலில் கடந்த 2001ல் ரெட்டியார்பாளையம் தொகுதியில் பாஜகவில் போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தி மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார். அவர் அத்தேர்தலில் 11,446 வாக்குகளை பெற்று வென்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் விஸ்வநாதனை வீழ்த்தினார். அவர் பெற்ற வாக்குகள் 7,985.

இதன்பின்னணியில் சுவாரஸ்ய சம்பவம் ஒன்று உண்டு.

இதுபற்றி அக்காலத்து பாஜகதலைவர்கள் கூறுகையில், "புதுச்சேரியில் பாஜக வளர்ச்சியடையாத காலம். அப்போது பல தேர்தலில் போட்டியிட்டு கிருஷ்ணமூர்த்தி தோல்வியை தழுவி வந்தார். பால் வியாபாரம் செய்த அவர் ஒரு அரசு நிகழ்வில் கேள்வி எழுப்பியபோது பிரச்சினை ஏற்பட்டதால் அவமானமடைந்தார். அதனால் தேர்தலில் வென்றுதான் செருப்பு அணிவேன் என்று உறுதியெடுத்தார். அதன்பின்னர் 2001 தேர்தலில் வென்ற பிறகே சட்டப்பேரவை வளாகத்துக்குள் வந்த பின்பு செருப்பு வாங்கி வந்து அணிந்தார்" என்று பழைய நிகழ்வை நினைவு கூர்கின்றனர்.

ஆனால், 2001க்கு பின் வந்த தேர்தல்களில் பாஜக ஒரு தொகுதியில் கூட புதுச்சேரியில் வெல்லவில்லை. மத்தியில் பிரதமராக மோடி பொறுப்பேற்றப் பிறகு கடந்த 2016ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சித்தது. ஆனால் இரு கட்சிகளும் பாஜகவை விலக்கின.

கடந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன. காங்கிரஸ் 30.6 சதவீத வாக்குகளும், என்.ஆர்.காங்கிரஸ் 28.1 சதவீத வாக்குகளும், அதிமுக 16.8 சதவீத வாக்குகளும், திமுக 8.9 சதவீத வாக்குகளும், பாஜக 2.4 சதவீத வாக்குகளும் பெற்றன.

இந்தத் தேர்தலில் பாஜக முன்கூட்டியே களமிறங்கி யிருக்கிறது. காங்கிரஸில் இருந்து முக்கிய அமைச்சர், எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய, கூடுதல் தெம்புடன் களத்தில் வலம் வருகின்றனர்.

ஆளுநரால் நிலவிய சர்ச்சை கிரண்பேடி மாற்றப்பட்டு, தமிழிசைநியமிக்கப்பட்ட பின் ஓய்ந்திருக்கிறது. இது அவர்களுக்கு கூடுதல் பலத்தை அளித்திருக்கிறது. கூட்டணிக்குள் விலகியிருந்த என்.ஆர்.காங்கிரஸ், அதிமுகவை பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் வழிக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.

மேலிடப் பொறுப்பாளர்கள், மத்திய அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் என பலரும் புதுச்சேரியில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

"20 ஆண்டுகளுக்குப் பின் பாஜக இம்முறை முக்கிய கட்சியாக புதுச்சேரியில் இடம்பெறும் வகையில் தொடர் பணிகளை தொகுதிவாரியாக செய்துள்ளோம். தேர்தலில் போட்டியிடும் 9 தொகுதிகளிலும் தொடர்ந்து தினந்தோறும் நிலவரங்களை பட்டியலிட்டு பணியாற்றுகிறோம். மேலிடத்தில் இருந்த புதுச்சேரி நிலவரத்தை உற்றுநோக்குகின்றனர்" என்கின்றனர் புதுச்சேரி பாஜக நிர்வாகிகள்.

புதுச்சேரியில் பாஜகவை பலப்படுத்துவதன் மூலம் தமிழகத்தில் வட மாவட்டங்கள், காரைக்காலையொட்டி காவிரி டெல்டா பகுதிகள், மாஹேயொட்டி கேரளம், ஏனாமையொட்டிய ஆந்திரம் என நான்கு மாநிலங்களில் 10 மக்களவைத் தொகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த முடியும் என்றும் பாஜக மேலிடம் கணக்கிடுகிறது.

அதனால் புதுச்சேரி பிராந் தியத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக பாஜக தலைமை கருதுகிறது. இம்முறை புதுவையில் வெற்றிக்கணக்கை தொடங்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

அந்த வெற்றிக்காக பாஜக- புதுச்சேரியின் நீண்ட நாள் கோரிக்கையான மாநிலஅந்தஸ்து, நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்ப்பது, கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை தீர்ப்பதற்கான உறுதியை தரவேண்டிய கட்டாயத்திலும் பொறுப்பிலும் பாஜக உள்ளது. எதிரேயுள்ள கோரிக்கையையும், சவாலையும் சமாளிக்குமா என்ற கேள்விக்கான விடை விரைவில் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x