அதிமுகவை மீட்கவே அமமுக தொடங்கப்பட்டது: நடிகை சி.ஆர்.சரஸ்வதி பேச்சு

திருப்பத்தூர் அண்ணாசிலை அருகே அத்தொகுதி அமமுக வேட்பாளர் கே.கே.உமாதேவனை ஆதரித்து பிரச்சாரம் செய்த நடிகை சி.ஆர்.சரஸ்வதி.
திருப்பத்தூர் அண்ணாசிலை அருகே அத்தொகுதி அமமுக வேட்பாளர் கே.கே.உமாதேவனை ஆதரித்து பிரச்சாரம் செய்த நடிகை சி.ஆர்.சரஸ்வதி.
Updated on
1 min read

‘‘அதிமுக, இரட்டை இலையை மீட்கவே அமமுக தொடங்கப்பட்டது,’’ என அமமுக மாநில கொள்கை பரப்புச் செயலாளரும், நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அத்தொகுதி அமமுக வேட்பாளர் கே.கே.உமாதேவனை ஆதரித்து அவர் பேசியதாவது:

அதிமுக, இரட்டை இலையை மீட்பதற்காகவே அமமுக தொடங்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக அதிமுகவில் இருந்துள்ளேன். இதே திருப்பத்தூருக்கு இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டு வந்தேன். தற்போது இரட்டை இலைக்கு எதிராக பிரச்சாரம் செய்வது மன வேதனையாக உள்ளது. இயக்குநர் மணிவண்ணன் ஒரு தீர்க்கதரிசி. அவர் எடுத்த அமைதிப்படை திரைப்படம் போன்றே தற்போது அரசியலில் நடந்துள்ளது.

நிஜத்தில் ஒரு அமாவாசையை பார்ப்பேன் என்று கனவில் கூட எதிர்பார்க்கவில்லை. முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் வாழ்வு கொடுத்தவர் சசிகலா. ஜெயலலிதா தமிழகத்தில் லேடியா? மோடியா? என பாஜகவை எதிர்த்தார். ஆனால் தற்போது பாஜகவிடம் அடிமையாக உள்ளனர்.

திமுகவில் வாழையடி வாழையாய் அவர்களும், அவர்களது வாரிசுகளும் மட்டுமே பதவி வகிக்கின்றனர். திமுக வென்றால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கருணாநிதி குடும்பத்திற்கே விசுவாசமாக இருப்பார்கள். மக்களுக்கு விசுவாசமாக இருக்க மாட்டார்கள்.

இந்தத் தேர்தலில் ஒரு புதிய ஆட்சியை உருவாக்குங்கள். மக்களுக்காக உழைக்கின்ற உண்மையான வேட்பாளரை வெற்றிபெறச் செய்யுங்கள், என்று பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in