Last Updated : 26 Mar, 2021 03:20 PM

 

Published : 26 Mar 2021 03:20 PM
Last Updated : 26 Mar 2021 03:20 PM

புதுச்சேரி அரசுப் பணிகளில் மகளிருக்கு 50% வேலைவாய்ப்பு; கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர்; பள்ளி மாணவர்களுக்கு டேப்: பாஜக தேர்தல் வாக்குறுதி

புதுச்சேரி அரசுப் பணிகளில் மகளிருக்கு 50 சதவீத வேலைவாய்ப்பு உறுதி செய்து தரப்படும், கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டரும், 9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு டிஜிட்டல் டேப்லெட் தரப்படும், பாரதியாருக்கு 150 அடியில் சிலை நிறுவப்படும் என்று, பாஜக தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி பாஜக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 'எங்கள் வாக்குறுதி' எனும் தலைப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி அண்ணாசாலையில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று (மார்ச் 26) காலை நடைபெற்றது.

இதில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோர் கலந்துகொண்டு பாஜகவின் தேர்தல் அறிவிக்கையை வெளியிட்டனர். இந்நிகழ்ச்சியில், பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், பாஜக வேட்பாளர்கள் பங்கேற்றனர்.

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

"தொழில்: புதுவையில் ஒருங்கிணைப்பட்ட மாபெரும் ஆடை உற்பத்தி தொழில்நுட்பப் பூங்கா உருவாக்கப்படும். துறைமுகம், வணிகம், வர்த்தகம், சுற்றுலாத்துறை ஆகியவை நுழைவு வாயிலாகச் செயல்படும்.

கல்வி: புதுவைக்கென தனிப் பள்ளிக் கல்வித் தேர்வாணையம் உருவாக்கப்பட்டு 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்படும். அரசுப் பள்ளிகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படும். 9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கப்படும். அனைத்து கொம்யூன்களிலும் கேந்திர வித்யாலயா பள்ளி, நவோதயா பள்ளி மற்றும் ஒரு ராணுவப் பள்ளி தொடங்கப்படும். மழலையர் முதல் உயர்கல்வி வரை பெண்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். கல்லூரி மாணவிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படும்.

சுற்றுலா: மருத்துவம், ஆன்மிகம், நல்வாழ்வு மற்றும் சாகச விளையாட்டுகளுடன் கூடிய சர்வதேச சுற்றுலாத் தலமாக புதுவை மாற்றப்படும். மகாகவி சுப்ரமணிய பாரதியாருக்கு 150 அடியில் சிலை நிறுவப்படும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள்: மகளிர் அனைவருக்கும் இலவச பொதுப் போக்குவரத்து வசதி செய்து தரப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கரோனா பேரிடர் காலத்தில் பெறப்பட்ட கடன்கள் தள்ளுப்படி செய்யப்படும். சுய உதவிக் குழுக்களுக்கு வட்டியில்லாமல் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். அனைத்து மகளிருக்கும் இலவச மருத்துவ உதவி வழங்கப்படும். உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 50 சதவீதப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

இளைஞர்கள்: 2.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அரசுத் தேர்வு எழுத வாய்ப்பு இழந்த இளைஞர்களுக்கு 5 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படும். புதிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு வாரியம் அமைக்கப்படும். அனைத்துத் தொகுதிகளிலும் விளையாட்டு மையங்கள் மற்றும் பொது உடற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.

நடமாடும் நியாயவிலைக்கடை ஏற்படுத்தப்படும். சென்னையுடன் புதுவை மற்றும் காரைக்காலை இணைப்பதற்கு கடல் வழி விமானம் மற்றும் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படும். பிஆர்டிசி மூலம் முதியோர் மற்றும் பெண்களுக்குச் சிறப்புக் கட்டணத்தில் பேருந்து இயக்கப்படும். பொதுப் போக்குவரத்தில் மின்சார வாகனப் பயன்பாடு ஊக்குவிக்கப்படும்.

விவசாயிகளின் வருமானம் அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கப்படும். ஒருங்கிணைந்த ஆடு, கோழி வளர்ப்பு மையங்கள் உருவாக்கப்படும். அதேபோல், மீனவர்களின் வருமானமும் அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கப்படும். மீனவர்களுக்கு நவீன வீடுகள் கட்டித் தரும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அனைத்து மீனவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படும். மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,000-ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். மிகப்பெரிய மீன் பதப்படுத்தும் கிடங்கு உருவாக்கப்படும்.

கடந்த ஆட்சியில் மூடப்பட்ட பஞ்சாலைகள், கூட்டுறவு மில்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமரின் ஆயுள் காப்பீடு திட்டம் அனைவருக்கும் நடைமுறைப்படுத்தப்படும். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள் மானிய விலையில் அதிகரிக்கப்படும். அதிநவீன புற்றுநோய் ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும். ஆயுஷ்மான் பாரத் திட்டம் 100 சதவீதம் நடைமுறைப்படுத்தப்படும். ஆஷா பணியாளர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்கப்படும்.

மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம் ரூ.3,000இல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி தரப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.1,750-ல் இருந்து ரூ.4,000 ஆகவும், கணவரை இழந்த பெண்களுக்கான ஓய்வூதியம் ரூ.2,000-ல் இருந்து ரூ.3,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படும்.

ஆன்மிகம்: ஆன்மிக வழிபாட்டுத் தலங்களும் அரசால் நிர்வகிக்கப்படாது. கோயில் நில அனைத்து ஆக்கிரமிப்பும் அகற்றப்படும். அனைத்துக் கோயில்களும் பாதுகாக்கப்படும். காரைக்கால் திருநள்ளாறு ஆலயம் பழமை மாறாமல் புதிய வளாகம் அமைக்கப்பட்டு தொன்மை மாறாமல் பாதுகாக்கப்படும்".

இவ்வாறு தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெறாத எதிர்பார்ப்பு

பாஜக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியானது மாநில அந்தஸ்து கோரிக்கையை பிரதானமாக முன்னிறுத்தி உள்ளது. ஆனால், பாஜக தேர்தல் அறிக்கையில் மாநில அந்தஸ்து வாக்குறுதி இடம் பெறவில்லை. அதேபோல், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல ஆயிரம் கடன் தள்ளுபடி தொடர்பான வாக்குறுதியும் இல்லை என்று பலரும் குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x