Published : 26 Mar 2021 02:58 PM
Last Updated : 26 Mar 2021 02:58 PM

கி.வீரமணி பேசிய பொதுக்கூட்டத்தில் கல்வீச்சு; இரா.முத்தரசன் கண்டனம்

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசிய பொதுக்கூட்டத்தில் கல்வீசப்பட்டதற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (மார்ச் 26) வெளியிட்ட அறிக்கை:

"ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து நேற்று நம்பியூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பங்கேற்று பேசியுள்ளார்.

கூட்டம் நடந்து கொண்டிருந்த போது மர்ம கும்பல் ஒன்று திடீரென பொதுக்கூட்ட மேடையை நோக்கி கற்களை வீசி கலவரத்தில் ஈடுபட்டுள்ளது. இதில், மேடையின் கீழ்பகுதியில் நின்று கொண்டிருந்த திராவிடர் கழக இளைஞரணி மாவட்டச் செயலாளர் வெற்றிவேல் காயமடைந்துள்ளார்.

இத்தகைய வன்முறை செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன் மர்ம கும்பலை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம்.

அத்துடன், தேர்தல் கூட்டங்களில் எதிர்கட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்".

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x