Published : 12 Nov 2015 08:36 AM
Last Updated : 12 Nov 2015 08:36 AM

பறவைகள் வருகையால் வேடந்தாங்கல் சரணாலயம் இன்று திறப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் மது ராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேடந்தாங்கலில் பறவைகள் சர ணாலயம் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் நவம்பர் மாதத் தில் சீசன் தொடங்குவது வழக்கம். அப்போது, நைஜீரியா, ஆஸ்திரே லியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இனப்பெருக்கத்துக்காக பற வைகள் இங்கு வருவது வழக்கம். ஏரியில் உள்ள மரக்கிளைகளில் கூடு கட்டி முட்டையிட்டு, குஞ்சு பொரித்த பிறகு, அவற்றையும் அழைத்துக் கொண்டு தாய்நாடு திரும்பும்.

இந்தப் பறவைகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதற்காக ஆண்டுதோறும் நவம்பர் மாதம் சரணாலயம் திறக்கப்படும். இந்நிலை யில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ம் தேதி சரணாலயம் திறக்கப்பட்டது.

ஆனால், வேடந்தாங்கல் மற்றும் சரணாலய ஏரியின் நீர் ஆதாரமாக கருதப்படும் பகுதிகளில் பருவமழை பொய்த்ததால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. நீரில்லாததால், பறவை களின் வரத்தும் குறைந்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்ற மடைந்தனர்.

இதைத் தொடர்ந்து, சரணாலய நிர்வாகம் ஏரி மற்றும் நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டது. எனினும், ஏரியில் தண்ணீர் இல்லாததால் அதில் இருந்து மரங்கள் காய்ந்தன.

இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழையால் வேடந் தாங்கல் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் கனமழை பெய்து வருகிறது. சரணாலய ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து, ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவுவதால் வெளி நாட்டு பறவைகள் வருகை அதிகரித்துள்ளது. சென்னை வன உயிரின காப்பாளர் கீதாஞ்சலி மற்றும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநர் ரெட்டி ஆகியோர், வேடந்தாங்கல் சரணாலயத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், பறவைகள் சரணாலயம் பொதுமக்கள் பார்வைக்கு இன்று முதல் திறக்கப்படும் என்று அவர்கள் அறிவித்தனர்.

இதுகுறித்து, சரணாலய வனச் சரகர் டேவிட் கூறியதாவது: சரணாலயத்தில் சீசன் தொடங்கியதும் சாம்பல் நாரை 201, நத்தை கொத்தி நாரை 2,220, பாம்புதாரா 41, நீர்க்காகம் 320, வெள்ளை அரிவாள் மூக்கன் 1,180, வக்கா 1003, சிறிய வெள்ளை கொக்கு 520, ஊசிவால் வாத்து 70, உன்னி கொக்கு 203 என மொத்தம் 5,758 பறவைகள் தற்போது வந்துள்ளன.

பறவைகள் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், சரணாலயம் பொதுமக்களின் பார்வைக்கு இன்று திறக்கப்படுகிறது. சிறியவர்களுக்கு ரூ.2, பெரியவர்களுக்கு ரூ.5 கட்டண மாக வசூலிக்கப்படும். கரிக்கிலி சரணாலயத்துக்கு ஊசிவால் வாத் துக்கள் வரத் தொடங்கியுள்ள தால், சுற்றுலாப் பயணிகளின் பார் வைக்கு திறக்கப்படுகிறது. இதற்கு அனுமதி இலவசம் என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x