Published : 26 Mar 2021 10:07 AM
Last Updated : 26 Mar 2021 10:07 AM

‘‘அ.தி.மு.க.வின் டாடி மோடி கோட்டு சூட்டு மாட்டிக்கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்று சுற்றி வருகிறார்;  ஏழைகளுக்காக என்ன செய்தார்?’’- ஸ்டாலின் கேள்வி

பல்லாவரம்

அ.தி.மு.க.வின் டாடி மோடி ஏழைத்தாயின் மகன் என்று சொன்னார், ஏழைத்தாயின் மகன் கோட்டு சூட்டு மாட்டிக்கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்று சுற்றி வருகிறார், ஏழைகளுக்காக என்ன செய்தார் என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை பல்லாவரத்தில்திமுக தலைவர் ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

உங்களைத் தேடி நாடி உதயசூரியனுக்கு வாக்குக் கேட்க வந்திருக்கிறேன். நம்முடைய வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்பதற்காக வந்திருக்கிறேன்.

ஏழைகளே இல்லாத நாடாக தமிழ்நாட்டை ஆக்கப்போகிறேன் என்று முதலமைச்சர் பழனிசாமி இரண்டு நாட்களாக சொல்லிக்கொண்டிருக்கிறார். அதாவது இனிமேல் தான் அதை செய்யப் போகிறாராம்.

நான்கு வருடங்களாக நீங்கள் தான் முதல்வராக இருக்கிறீர்கள். நான்கு வருடங்களாக என்ன செய்து கிழித்தீர்கள்?

முதல்வரானவுடன் உங்களுடைய உறவினர்களுக்கு உங்களுடைய சம்பந்திகளுக்கு டெண்டர் கொடுப்பது, மாநில உரிமைகளை மத்திய அரசுக்கு விட்டுக்கொடுப்பது - அடகு வைப்பது - அடிமையாக இருப்பது இதைத்தான் செய்தார்.

இப்போது நாற்காலியை விட்டு இறங்க போகின்ற நேரத்தில், சாகின்ற நேரத்தில் சங்கரா சங்கரா என்று சொல்வது போல, கடைசி நேரத்தில் அவருக்கு மக்களுடைய நினைவு வந்துவிட்டது.

பத்தாண்டுகளாக அ.தி.மு.க.தான் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. ஏழைகளுக்கு என்ன செய்தார்கள்? ஒன்றும் செய்யவில்லை. தொழில்துறையை வளர்த்தார்களா? இல்லை. வேலைவாய்ப்பை உருவாக்கினார்களா? இல்லை. விவசாயிகளை காப்பாற்றினார்களா? இல்லை. இவர்கள் எதுவும் செய்யவில்லை.

அதேபோல மத்தியில் இருக்கும் பா.ஜ.க. அரசும் எதுவும் செய்யவில்லை. அ.தி.மு.க.வின் டாடி மோடி. மோடி, நான் ஏழைத்தாயின் மகன் என்று சொன்னார். இந்த ஏழைத்தாயின் மகன் என்ன செய்தார்? கோட்டு சூட்டு மாட்டிக்கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்று சுற்றி வருகிறார். ஏழைகளுக்காக என்ன செய்தார் என்று கேட்டால் பெட்ரோல் - டீசல் விலையை ஏற்றி விலைவாசியை ஏற்றினார். இதுதான் அவர் ஏழைகளுக்கு செய்த செயல்.

ஒரு ஏழைத்தாயின் மகன் தான் தமிழக விவசாயிகளை நிர்வாணமாக ஓட விட்டார். 1000 ரூபாய் - 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொல்லி மக்களை ஏ.டி.எம். வாசலில் நிற்க வைத்தார். ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்து தொழில்துறையை நசுக்கி தொழிலாளர்களுடைய வேலையை இழக்க செய்தார். இவர்கள் இரண்டு பேரும் அதாவது மோடியும் - பழனிசாமியும் ஏழை இல்லாத நாடாக ஆக்கப் போகிறோம் என்று சொல்லி ஒரு மிகப்பெரிய பொய்யைச் சொல்லிக்கொண்டு இப்போது ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஜோடி போட்டுக் கொண்டு வாக்குக் கேட்க வரும் இந்தக் கூட்டத்தை கூண்டோடு அழிக்க வேண்டும் என்றால் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நீங்கள் அத்தனை பேரும் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழ்நாடு என்று சொன்னாலே தொழில் நிறுவனங்கள் ஓடுகிறார்கள். அதற்கு காரணம், இங்கு தொழில் செய்ய வருபவர்களிடம் கமிஷன் கேட்பதுதான்.

அந்த கமிஷனை கொடுக்க முடியாது என்று சொல்லி பல மாநிலங்களுக்கு சென்று விட்டார்கள். எனவே முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி கையாலாகாதவர் – உதவாக்கரை.

கருணாநிதி தலைமையில் இருந்த ஆட்சியில் நான் துணை முதலமைச்சராக இருந்தபோது, உள்ளாட்சி துறையும் - தொழில்துறையும் என்னுடைய பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

தொழில்துறையை கவனித்துக் கொண்டிருந்தபோது, சென்னை - திருப்பெரும்புதூர், சென்னை - காஞ்சிபுரம், சென்னை – சோழிங்கநல்லூர். இங்கு எல்லாம் எத்தனையோ புதிய தொழிற்சாலைகளை உருவாக்கினேன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

இப்போது ஏன் அது வரவில்லை என்று கேட்டால் இந்த ஆட்சி மீதும் முதலமைச்சர் மீதும் தொழில்முனைவோருக்கு துளி அளவும் நம்பிக்கை இல்லை. வேலைவாய்ப்புகள் இல்லாமல் இன்றைய இளைஞர்கள் அவதிப்பட காரணம் இந்த ஆட்சி தான்.

மக்களை ஏய்க்கும் ஆட்சியை - மக்களைச் சுரண்டும் ஆட்சியை - மக்களை வெறுக்கும் ஆட்சியை ஓட ஓட விரட்டுவதற்கு வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நீங்கள் எல்லாம் தயாராக இருக்க வேண்டும்.

ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. நம்முடைய தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து அப்படியே வெளியிட்டு இருக்கிறது. அதில் சில பொய்யான திட்டங்களையும் - பொய்யான செய்திகளையும் - நினைத்தே பார்க்க முடியாத வாக்குறுதிகளையும் சொல்லி இருக்கிறார்கள்.

மக்களுக்கு எதுவும் தெரியாது. அவர்களை ஏமாற்றி விடலாம் என்ற நினைப்பில் சில அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.

நான் கேட்க விரும்புவது, 2011-ஆம் ஆண்டு, அதேபோல 2016-ஆம் ஆண்டும் அவர்கள் தான் ஆட்சிக்கு வந்தார்கள். அப்படி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்கள். அதில் சிலவற்றை மாத்திரம் நான் சொல்ல விரும்புகிறேன்.

அனைவருக்கும் செல்போன் இலவசம் என்று சொன்னார்கள். கொடுத்தார்களா? கேபிள் கட்டணத்தை 70 ரூபாய்க்கு குறைப்போம் என்று சொன்னார்கள். குறைத்தார்களா? பொது இடங்களில் வை-ஃபை வசதி செய்து தருவோம் என்று சொன்னார்கள். செய்தார்களா? அதை இப்போதும் சொல்லி இருக்கிறார்கள். 10 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று சொன்னார்கள். கட்டினார்களா?

திருச்சி, மதுரை, கோவையில் மோனோ ரயில் விடுவோம் என்று சொன்னார்கள். விட்டார்களா? விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் போடப்படாது என்று சொன்னார்கள். செய்தார்களா? ஆவின் பால் லிட்டர் 25 ரூபாய்க்கு கொடுப்போம் என்று சொன்னார்கள். கொடுத்தார்களா? இதுதான் அவர்கள் வாக்குறுதியை காப்பாற்றுகிற லட்சணம்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் நீட் தேர்வை தடுத்துவிடுவோம் என்று சொன்னார்கள். தடுத்தார்களா? அனிதா உட்பட பல மாணவ - மாணவிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்கள்.

இந்த லட்சணத்தில் முதல்வர் பழனிசாமி நாங்கள் சொன்னதை செய்து விட்டோம் என்று சொல்லியிருக்கிறார். சொன்னதை எல்லாம் செய்யாத ஆட்சியை தான் இன்றைக்கு தமிழ்நாட்டில் பழனிசாமி நடத்திக் கொண்டிருக்கிறாரே தவிர, வேறு ஒன்றுமில்லை.

ஆனால் அதே நேரத்தில் திமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். 1957-இல் தேர்தல் களத்தில் இறங்கியபோது அண்ணா அவர்கள் வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையை முதன் முதலாக வெளியிட்ட ஒரு கட்சி எது என்றால் அது தி.மு.க. தான். அதற்கென்று ஒரு குழு அமைக்கப்பட்டு அந்தக் குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையை ஒவ்வொரு முறையும் வெளியிடுவோம்.

இந்த ஆண்டும் நம்முடைய டி.ஆர்.பாலு அவர்கள் தலைமையில் தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்கு தமிழகம் முழுவதும் சுற்றி பல தரப்பு மக்களையும் சந்தித்து, அதற்கு பிறகு தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையை நாம் வெளியிட்டு இருக்கிறோம்.

அதில் குறிப்பாக சென்னை நகருக்கு, சென்னையில் புயல் - வெள்ள காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த சென்னை பெருநகர் வெள்ள தடுப்பு மேலாண்மை குழு அமைக்கப்படும். சென்னை உள்ளிட்ட மாநகரங்களிலும் நகரங்களிலும் சொந்தமாக ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலமாக அல்லது வங்கிக் கடன் மூலமாக ஆட்டோ வாங்குவதற்கு அரசு தரப்பில் 10,000 ரூபாய் மானியம் வழங்குவோம். மதுரவாயலில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு மருத்துவமனை. சென்னையில் பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் அமைத்து எல்லா வகை போட்டிகளும் உயர்தர பயிற்சிகளும் அளிக்கப்படும். சென்னை போன்ற பெருநகரங்களில் நவீன அடுக்குமாடி கார் நிறுத்தும் வசதிகள் செய்து தரப்படும். பெண்களுடைய முன்னேற்றத்திற்காக, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும், மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்பது உட்பட பல்வேறு சிறந்த வாக்குறுதிகளை வழங்கி உள்ளோம். மாதம் ஒருமுறை மின்கட்டணம், விலைவாசியைக் கட்டுப்படுத்த பால் விலை, பெட்ரோல் - டீசல் விலையைக் குறைத்தல், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளையும் வழங்கி இருக்கிறோம்.

இந்த மூன்று தொகுதிகளுக்காக, சென்னை பெருநகரில் மழைக் காலத்தில் வெள்ளமெனக் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும். சென்னைப் பெருநகரில் சிற்றுந்து சேவை அதிகப்படுத்தப்படும். சென்னைப் பெருநகரில் அனைத்துப் பகுதிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும். சென்னைப் பெருநகரில் உள்ள அனைத்து ஏரிகளும் தூர்வாரப்பட்டு, கழிவுநீர் கலக்காமல் தூய்மைப்படுத்தப்படும். சோழிங்கநல்லூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து மழைநீரானது ஒக்கியம் மடுவுவரை செல்ல மிகப்பெரிய அளவில் மழைநீர் கால்வாய் அமைக்கப்படும். சோழிங்கநல்லூர் தொகுதி நன்மங்கலம் ஏரி தூய்மைப்படுத்தப்பட்டு படகுகள் விடப்படும். ஓ.எம்.ஆர். சாலையில் அரசுப் பொது மருத்துவமனை அமைக்கப்படும். கண்ணகி நகரில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்படும். சென்னைப் பெருநகரில் தேவையான இடங்களில் விளையாட்டுத் திடல்கள் உடற்பயிற்சிக் கூடங்கள், பூங்காக்கள் அமைக்கப்படும். ஏற்கனவே உள்ளவை தரம் உயர்த்தப்படும். சென்னைப் பெருநகரில் மேலும் பல இடங்களில் நூலகங்கள் அமைக்கப்படும். வடநெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் புனித தோமையர் மலை தெற்கு ஒன்றியத்திற்கு விரிவுபடுத்தப்படும்.

எனவே இந்த மூன்று வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு இருக்கிறேன். இப்போது இன்னொரு வேட்பாளருக்கு வாக்கு கேட்கப் போகிறேன். யாருக்கு என்றால் எனக்கு தான்.

கொளத்தூர் தொகுதியில் என்னை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். நான் முதல்வராக வர வேண்டும் என்றால் இவர்களை வெற்றி பெற வையுங்கள். உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்.

பத்தாண்டுகளாக எல்லா துறைகளும் பாழடைந்து போய் இருக்கிறது. பாதாளத்திற்கு சென்றுவிட்டது. ஐம்பது வருடத்திற்கு பின்னோக்கி சென்று விட்டோம்.


தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, நீட்டை கொண்டுவந்து நுழைத்து, சமஸ்கிருதத்தை திணித்து, மத வெறியை தூண்ட நினைப்பவர்களுக்கு, நான் உறுதியோடு சொல்ல விரும்புவது, அது நடக்கவே நடக்காது.

இது திராவிட மண். தந்தை பெரியார் - அண்ணா - கலைஞர் வாழ்ந்த மண் இந்த மண். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது.

இது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் என்று மட்டும் நினைக்காதீர்கள். நம்முடைய உரிமைகள் பறிபோய்விட்டது. நம்முடைய சுயமரியாதை பறிபோய்விட்டது. நம்முடைய சுயமரியாதையை காப்பாற்றுவதற்கான தேர்தல் என்பதையும் நீங்கள் மறந்து விடாதீர்கள்.

இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x