Published : 26 Mar 2021 09:30 AM
Last Updated : 26 Mar 2021 09:30 AM

‘‘அடுத்து முதல்வர் பதவி வரும் என்பதை எடப்பாடி பழனிசாமி கனவு கூட காண முடியாது’’ - ஸ்டாலின் சாடல்

செஞ்சி

ஸ்டாலின் கனவு பலிக்காது என்று முதல்வர் பழனிசாமி சொல்லிக் கொண்டிருக்கிறார், நானாவது கனவு காண்கிறேன், உங்களுக்கு இனிமேல் அடுத்து முதல்வர் பதவி வரும் என்பதைக் கனவு கூட காண முடியாது என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும், அதுதான் உண்மை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

செஞ்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:

உங்களைத் தேடி நாடி உங்களிடத்தில் ஆதரவு கேட்டு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியை நீங்கள் எல்லாம் தேடித்தர வேண்டும்.

வீரத்திற்கும் தீரத்திற்கும் அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கும் செஞ்சிக் கோட்டைக்கு வந்திருக்கிறேன். மயில் தோகை போல விரிந்திருக்கும் குன்றுகளைக் கொண்ட மைலத்திற்கு வந்திருக்கிறேன். அப்பர் பெருமானால் பாடப்பட்ட திண்டிவனத்திற்கு வந்திருக்கிறேன்.

இப்போது கரோனா இரண்டாவது அலை வந்திருக்கிறது. முதல் அலை வந்தபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கச் சட்டப்பேரவையிதிலேயே வலியுறுத்தினோம். ஆனால், அவர்கள் அலட்சியமாகப் பதிலளித்தனர்.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் என்கிற முறையில் நான், ஒரு கோரிக்கை வைத்தேன். இன்றைக்கு மக்கள் வீட்டிற்குள் அடங்கி இருக்கிறார்கள். வேலைக்குப் போக முடியவில்லை. அவர்களுக்கு வருமானம் இல்லை. உணவுக்கும் வழியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே அரசு உடனடியாக 5,000 ரூபாய் உதவித்தொகை நிவாரணமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

ஆனால் நிதி இல்லை. அதனால் கொடுக்க முடியாது என்று ஒரு விளக்கம் கொடுத்தார்கள். இன்னும் ஒரு வாரத்தில் கொரோனா நோய் போய் விடும் என்று சொன்னார்கள். ஆனால் ஒரு வருடம் ஆகிவிட்டது. குறைந்த நோய் மீண்டும் வர ஆரம்பித்து விட்டது.

அதனால் இங்கு இருப்பவர்களை நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் கூட்டத்தில் இருக்கும்போது மாஸ்க் போட்டுக் கொள்ளுங்கள். நான் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். தடுப்பூசி போடுவதால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதனால் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். இதனை உங்களுடைய அண்ணனாக – தம்பியாக – தாய்மார்களிடத்தில் பிள்ளையாகக் கேட்டுக்கொள்கிறேன்.

சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும். நாம் நன்றாக இருந்தால் தான் நம்முடைய சந்ததியினரை நாம் காப்பாற்ற முடியும். எனவே தான் நான் உங்களை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

கரோனா காலத்தில் திமுக செய்திருக்கும் சாதனையை யாரும் மறக்க முடியாது. நான் பெருமையோடு சொல்கிறேன். அரசு எதுவும் செய்யவில்லை - அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதனால் தி.மு.க.வின் சார்பில் நான் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தை அறிவித்து காணொலிக் காட்சி மூலமாக மாவட்டத் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து இவ்வாறு ஒரு திட்டத்தை அறிவித்து இருக்கிறேன். அதற்கு தொலைபேசி நம்பர் கொடுத்து இருக்கிறேன். யாராவது உதவி கேட்டால் அவர்களுக்கு உடனடியாக நேரடியாகச் சென்று உதவி செய்யவேண்டும். அவர்கள் உணவு, மளிகை பொருட்கள், காய்கறிகள், நோயாளிகள் மருந்து மாத்திரைகள் கேட்கிறார்கள். அதை நம்மால் முடிந்த வரைக்கும் செய்ய வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் சொல்லி அதற்குப்பிறகு இதை விளம்பரம் செய்தோம்.

நம்முடைய கழகத் தோழர்கள் அத்தனை பேரும் களத்தில் இறங்கிப் பாடப்பட்டு பணியாற்றிய உதவி செய்தது தி.மு.க.வின் மிகப்பெரிய வரலாறு என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். தமிழ்நாட்டில் அல்ல, இந்தியாவில் அல்ல, உலகத்தில் எந்த கட்சியும் செய்யாத ஒரு சாதனையைத் திமுக செய்தது என்பதை நெஞ்சை நிமிர்த்தி நம்மால் சொல்ல முடியும்.

இந்த கரோனா நோய்த்தொற்று என்பது சில நோய் இருப்பவர்களுக்கு வந்துவிட்டால் மிகவும் ஆபத்தாகிவிடும். அவர் ஏற்கனவே பதினைந்து, இருபது வருடங்களுக்கு முன்பு லண்டனுக்கு சென்று ஒரு மிகப் பெரிய அறுவை சிகிச்சை செய்து வந்து இருக்கிறார்.

அதனால் நீங்கள் தயவு செய்து வெளியில் வந்து விடாதீர்கள். உங்களுக்கு கரோனா நோய் தொற்றிக் கொண்டால் உங்கள் உயிருக்கே ஆபத்து வந்துவிடும். தயவு செய்து நீங்கள் வெளியே வர வேண்டாம் என்று சொல்லி இருந்தோம்.

ஆனால் கொஞ்ச நாள் பொறுமையாக இருந்தார். ஆனால் நம்முடைய மாவட்டச் செயலாளர்கள் – எம்.எல்.ஏ.க்கள் – எம்.பி.க்கள் ஒவ்வொரு ஊராகச் சென்று உதவிகள் செய்கிற காட்சியை தொலைக்காட்சிகளில் பத்திரிகைகளில் பார்த்துவிட்டு அவரால் சும்மா இருக்க முடியவில்லை.

அதனால் தன்னை மீறி வெளியே வந்து மக்களை நேரில் சந்தித்து உதவிகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டார். ஆனால் இரண்டு நாட்களில் தோற்று அவரைப் பற்றிக் கொண்டது. அதன்பிறகு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை செய்து உயிரைக் காப்பாற்றுவதற்குப் போராடினோம். ஆனால் முடியவில்லை.

எதற்காக சொல்கிறேன் என்றால் தி.மு.க.காரன் தன்னுடைய உயிரையே பணயம் வைத்து ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தை நடத்திக் காட்டி இருக்கிறான் என்பது வரலாறு.

ஏன், நம்முடைய மஸ்தான் அவர்களுக்கு வந்தது. அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு உடல் நலம் பெற்று வந்தார். இதுபோன்று பல பேருக்கு வந்திருக்கிறது.

எனவே அந்த ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலமாக அந்த பணியை நிறைவேற்றினோம். முதலில் நான் 5,000 ரூபாய் சொன்னபோது நிதியில்லை என்று சொன்னார்கள்.

அதற்கு பிறகு 1,000 ரூபாய் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் பொங்கல் பரிசு என்று சொல்லி 2,500 ரூபாய் கொடுத்தார்கள். மக்கள் கேட்டபோது கொடுக்கவில்லை.

எனவே அரசாங்க பணத்தைத் தேர்தலுக்காகப் பயன்படுத்துகிற ஒரு ஆட்சி தான் இன்றைக்குத் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. உண்மையாக மக்கள் மீது அக்கறை கொண்டு கொடுக்கவில்லை என்பதை நீங்கள் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைக்கு நாளுக்கு நாள் விலைவாசி விஷம் போல உயர்ந்து கொண்டிருக்கிறது. அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்தியில் இருக்கும் ஆட்சியும் - மாநிலத்தில் இருக்கும் ஆட்சியும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறி மாறி வரியைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் அதைவிடக் கொடுமையானது, இப்போது ரேஷன் கடைகளில் தரமில்லாத பொருட்களை மக்கள் தலையில் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் 34,000-க்கும் மேற்பட்ட கடைகளில் அரிசி, சர்க்கரை தவிர்த்து தேவையில்லாத பொருட்களை மக்கள் தலைகளில் கட்டுமாறு ஊழியர்களைக் கட்டாயப்படுத்தியதாக கூறிக் கொண்டிருக்கிறார்கள். இதைவிட மோசமான ஆட்சி ஒன்று இருக்கவே முடியாது.

இந்த லட்சணத்தில் பழனிசாமி அடிக்கடி, மக்களைக் குழப்பி வெற்றி பெறுவதற்காக ஸ்டாலின் பொய் சொல்லி சதி செய்து கொண்டிருக்கிறார் என்று தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திலும் பேசிக்கொண்டிருக்கிறார்.

மக்களை நான் குழப்பவில்லை. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். எப்போது ஆறாம் தேதி வரப்போகிறது? எப்போது இந்த ஆட்சியை ஒழிக்கப் போகிறோம்? என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.

ஸ்டாலின் கனவு காண்கிறார். அந்தக் கனவு பலிக்காது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். நானாவது கனவு காண்கிறேன். உங்களுக்கு இனிமேல் அடுத்து முதலமைச்சர் பதவி வரும் என்பதைக் கனவு கூட காண முடியாது என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும். அதுதான் உண்மை.

எனவே பழனிசாமியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்பதில் மக்கள் இன்றைக்குத் தெளிவாக இருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் பத்தாண்டுகாலம் சீரழிந்து போயிருக்கும் இந்த தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியும் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

எனவே அ.தி.மு.க. ஆட்சியை மட்டுமல்ல, பா.ஜ.க.வையும் உள்ளே விடக்கூடாது என்பதில் இன்றைக்கு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதைத் தடுக்கின்ற ஆற்றல் சக்தி தி.மு.க.விற்கு தான் உண்டு என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.

எனவே தயவு செய்து நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். கருத்துக்கணிப்புகள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. அது நல்லபடியாக வந்தாலும் சரியாக வரவில்லை என்றாலும் கலைஞர் அவர்கள் எப்போதும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதை நம்ப மாட்டார்கள்.

ஏற்கனவே நாம் ஆட்சியில் இருந்தபோது உச்சநீதிமன்றமே பொது விநியோகத்தில் இந்தியாவில் சிறந்த மாநிலம் தி.மு.க.தான் – கலைஞர் ஆட்சி தான் என்று பாராட்டி இருக்கிறது. இதற்கு ஆதாரங்கள் இருக்கிறது.

அதேபோல, குடும்ப அட்டைகள் விண்ணப்பித்த 15-வது நாளுக்குள் வழங்கப்படும். 20 கிலோ இலவச அரிசி திட்டம் தொடரும். தரமான அரிசி வழங்கப்படும். மாதந்தோறும் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும். உளுத்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும். பல துறைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நியாயவிலைக் கடைகள் ஒரே துறையின் கீழ் கொண்டுவரப்படும். பழைய குடும்ப அட்டைகள் மாற்றப்பட்டு அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். கடைகளில் இருப்பில் உள்ள பொருள்கள் மின்னணு தகவல் பலகையில் வெளியிடப்படும். அனைத்துப் பொருள்களும் பாக்கெட்டுகளில் வழங்கிட ஆவன செய்யப்படும். மானிய விலையில் எல்.இ.டி. பல்புகள் வழங்கப்படும்.

பெண்களுடைய முன்னேற்றத்திற்காக, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும், மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம், மாதம் ஒருமுறை மின்கட்டணம், விலைவாசியைக் கட்டுப்படுத்த பால் விலை, பெட்ரோல் - டீசல் விலையைக் குறைத்தல், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறோம்.

மேலும் இந்த மூன்று தொகுதிகளுக்காக, மரக்காணத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க ஆவன செய்யப்படும். திண்டிவனத்தில் மீண்டும் தொழிற்பேட்டை அமைக்கப்படும். திண்டிவனம், மரக்காணம் மற்றும் செஞ்சி அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்படும். செஞ்சி கோட்டை தேசிய மற்றும் பன்னாட்டுச் சுற்றுலா மையமாகத் தரம் உயர்த்தப்படும். மரக்காணத்தில் அரசு மகளிர் கல்லூரி, அயோடின் கலந்த உப்புத் தொழிற்சாலை. திண்டிவனம் தொகுதி மரக்காணத்தில் மீன் பதப்படுத்தும் குளிரூட்டும் மையம்; நடுக்குப்பம் பகுதியில் மரவள்ளிக் கிழங்கு விவசாயிகளுக்கு சாக்கோ கம்பெனி. திண்டிவனம் நகரம் இந்திரா காந்தி பழைய பேருந்து நிலையம் அருகில் இடங்கல் ஏரி வழியாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும். திண்டிவனம் அருகே ஓமந்தூர் பகுதியில் நரசிம்ம ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும். செஞ்சி அனந்தபுரத்தில் அரசுப் பேருந்து பணிமனை. செஞ்சி பகுதியில் அரசு வேளாண் கல்லூரி, மூலிகைப் பண்ணை; விதைப் பண்ணை. இது நாம் ஆட்சிக்கு வந்து 5 வருடத்திற்குள் நிறைவேற்றப்பட இருக்கின்ற சில திட்டங்கள்.

ஏற்கனவே கடந்த 7-ஆம் தேதி திருச்சியில் மாநில மாநாடு போல ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தினோம். அந்த பொதுக்கூட்டத்தில் ‘ஸ்டாலினின் ஏழு வாக்குறுதிகள்’ என்ற தலைப்பில் 10 வருடத்திற்கான தொலைநோக்கு பார்வையோடு திட்டங்களை அறிவித்தேன். அதை அறிவிக்கும்போது இது அண்ணா மீது – தலைவர் கலைஞர் மீது – தமிழ்நாட்டு மக்கள் மீது ஆணை என்று தான் அறிவித்தேன்.

அதில் தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, நீட்டை கொண்டுவந்து நுழைத்து, மதவெறியைத் தூண்ட நினைப்பவர்களுக்கு, நான் உறுதியோடு சொல்ல விரும்புவது, அது நடக்கவே நடக்காது.

இது திராவிட மண். தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா - கலைஞர் வாழ்ந்த மண் இந்த மண். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்குப் பலிக்காது.

இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x