வாக்குப்பதிவு முடிந்ததும் கண்டுகொள்ளப்படாத பெண் அலுவலர்கள்: இந்தத் தேர்தலிலாவது மாறுமா?

வாக்குப்பதிவு முடிந்ததும் கண்டுகொள்ளப்படாத பெண் அலுவலர்கள்: இந்தத் தேர்தலிலாவது மாறுமா?
Updated on
1 min read

மலை மற்றும் உட்கடை கிராம வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு பணிகள் முடிய இரவு 11 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது. போக்குவரத்து வசதி இல்லாத அப்பகுதியில் இருந்து வீடு திரும்ப சிரமப்படும் நிலை உள்ளது. இந்தத் தேர்தலிலாவது உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பெண்அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாக்குப்பதிவுக்காக தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு நான்குகட்டப் பயிற்சிகள் வழங்கப்படும். இறுதிகட்டப் பயிற்சியின் போதுதான் எந்த வாக்குச்சாவடிஒதுக்கப்படுகிறது என்ற விபரம் தெரிவிக்கப்படும்.

பயிற்சிவகுப்பில் இருந்தபடியே இவர்கள் சம்பந்தப்பட்ட பூத்திற்கு செல்ல வேண்டும். இரவில் அங்கேயே தங்கி மறுநாள் நடைபெறும் வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

வாக்குப்பதிவு முடிந்ததும் ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்திலே வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கப்படும். இந்த வாகனத்தில் இயந்திரங்களை ஒப்படைக்க பெரும்பாலும் 11 மணிக்கு மேல் ஆகிவிடும்.அதற்குப்பிறகு தேர்தல் அலுவலர்கள் திரும்பி வருவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்வதில்லை.

இதனால் மலை மற்றும் உட்கடை கிராமத்தில் பணிபுரிபவர்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் இரவுகளில் பரிதவிக்கும் நிலை உள்ளது. இந்த முறை வாக்குப்பதிவு நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளன. எனவே நள்ளிரவாகி விடும். அதன்பின் வீடு திரும்புவது எப்படி என்ற பரிதவிப்பில் பெண்ஊழியர்கள் உள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பாளர் மு.முருகேசன் கூறுகையில், இம்முறை தேர்தல் பணி முடியவே நள்ளிரவு ஆகிவிடும். அலுவலர்கள் வாக்குச்சாவடியில் இருந்து ஊர் திரும்புவதற்கான ஏற்பாடுகளை இதுவரை தேர்தல் ஆணையம் செய்ததில்லை.

இதனால் உட்கடை மற்றும் மலைப்பகுதியில் பணிபுரியும் பெண்ஊழியர்கள் வீடு திரும்ப மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இம்முறையாவது அவர்களுக்கு உரிய போக்குவரத்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in