ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்- மயிலை கபாலீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்: இன்று அறுபத்து மூவர் விழா

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.படம்: பு.க.பிரவீன்
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.படம்: பு.க.பிரவீன்
Updated on
1 min read

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனித் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். அறுபத்து மூவர் விழா இன்று நடைபெறுகிறது.

சென்னையில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா கடந்த 19-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, அதிகார நந்தி, சவுடல் விமானம் உள்ளிட்ட வாகனங்களில் மாட வீதிகளில் சுவாமி உலா வந்து அருள்பாலித்தார்.

பக்தர்கள் பக்திப் பரவசம்

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி, காலை 8 மணி அளவில் திருத்தேருக்கு கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் எழுந்தருளினர். காலை 8.45 மணி அளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தேரோட்டம் தொடங்கியது. வழிநெடுகிலும் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். மாடவீதிகளில் வலம்வந்த தேர், பிற்பகல் 1.30 மணி அளவில் நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார்பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

‘கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்’ என்று போலீஸார் தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தியபடி இருந்தனர். தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் பெரும்பாலானோர் முகக் கவசம் அணிந்திருந்ததை காண முடிந்தது.

தனியார் அமைப்புகள் மூலம் சாலையோரத்தில் பந்தல்கள் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு நீர்மோர், பானகம் வழங்கப்பட்டன. நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து, சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.

28-ம் தேதி திருக்கல்யாணம்

வெள்ளி விமானத்தில் 63 நாயன்மார்களோடு இறைவன் காட்சி தரும் அறுபத்து மூவர் விழாவழக்கமான உற்சாகத்துடன் இன்று மதியம் 2.45 மணி அளவில் தொடங்கி நடைபெற உள்ளது. வரும் 28-ம் தேதி இரவு 7.30 மணிஅளவில் திருக்கல்யாண உற்சவமும், 30-ம் தேதி விழா நிறைவு திருமுழுக்கும் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, ஏப்.8-ம் தேதி வரை விடையாற்றி விழா நடைபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in