

மருத்துவப் படிப்பில் ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட மற்றும் பின்தங்கிய வகுப்புகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்களின் கல்வி உரிமையைத் தட்டிப் பறிக்கும் அணுகுமுறையை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருவது கொடுமையானதாகும். சமூக நீதிக் கோட்பாட்டிற்கும் முழு விரோதமானதாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கை:
“மருத்துவக் கல்வியில் நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்படும் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குத் தமிழக அரசு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் நிறைவேற்றியது.
இதேபோன்று புதுச்சேரி அரசு, அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீத இட ஒதுக்கீட்டினை வழங்கித் தீர்மானம் நிறைவேற்றியது. இத்தீர்மானத்திற்கு அப்போதைய துணைநிலை ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் 10 சதவீத இட ஒதுக்கீட்டைப் புதுச்சேரியில் அமலாக்க வேண்டுமென ஒரு மாணவி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது சட்ட விரோதம். இதனால் திறமையான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும், இத்தகைய இட ஒதுக்கீடு நீட் தேர்வு அடிப்படைக்கே விரோதமானது என்பதால் இந்த இட ஒதுக்கீட்டை நிராகரிக்கிறோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்திலும் நீட் தேர்வு அமலாகியுள்ள நிலையில் தமிழக அரசு, அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டு அமலாகி வருகிறது. இது தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.
மத்திய அரசு, புதுச்சேரி வழக்கில் மேற்கொண்ட அதே அணுகுமுறையினையே இவ்வழக்கிலும் மேற்கொள்ள வாய்ப்புள்ளதால், தமிழக அரசு நிறைவேற்றியுள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீடு பறிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அணுகுமுறை வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
மருத்துவப் படிப்பில் ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட மற்றும் பின்தங்கிய வகுப்புகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்களின் கல்வி உரிமையைத் தட்டிப்பறிக்கும் அணுகுமுறையை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருவது கொடுமையானதாகும். சமூக நீதிக் கோட்பாட்டிற்கும் முழு விரோதமானதாகும்.
இத்தகைய கொள்கை கொண்டுள்ள பாஜகவுடன், அதிமுக கூட்டணி சேர்ந்துள்ளது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும். இக்கூட்டணிக்கு தமிழக, புதுச்சேரி வாக்காளர்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என்பது திண்ணம்.
நீட் தேர்வு இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் போராட முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்”.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.