ஏப்.6 அன்று ஊதியத்துடன் விடுமுறை; பின்பற்றாத தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையம் அறிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 

ஏப்.6 அன்று ஊதியத்துடன் விடுமுறை; பின்பற்றாத தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையம் அறிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 
Updated on
1 min read

வாக்குப்பதிவு தினத்தன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக குற்ற வழக்குத் தொடரப்படும் என அறிவிக்கை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், 100% வாக்கை ஊக்குவிக்க, அனைவரும் வாக்களிக்க தேர்தல் ஆணையம் பல விழிப்புணர்வு பிரச்சாரங்களைச் செய்து வருகிறது. வாக்களிப்பதை ஊக்குவிக்க அன்றைய தினம் விடுமுறை தினமாக அரசு அறிவித்துள்ளது.

ஆனால், அரசு சாராத தனியார் நிறுவனங்கள் அரசின் உத்தரவை மதிப்பதில்லை. தேர்தலில் வாக்களிக்க அரசு அளித்த விடுமுறையை அளிப்பதில்லை. ஊழியர்கள் வாக்களிக்க அனுமதிக்கும் வகையில், ஊதியத்துடன் விடுமுறை வழங்குவதில்லை. வாக்குப்பதிவு தினத்தன்று தனியார் நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பை அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி சேலத்தைச் சேர்ந்த அஹமது ஷாஜகான் என்பவர் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக, ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்கும் தனியார் நிறுவன ஊழியர்களின் உரிமை குறித்து விளம்பரப்படுத்தும் வகையில் அறிவிக்கை வெளியிட வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டது.

மேலும், இது சம்பந்தமான சட்டவிதிகளை மீறும் தனியார் நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அந்த அறிவிக்கையில் எச்சரிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in