

அதிகாரம் இல்லாத முதல்வர் பதவி எதற்கு, யூனியன் பிரதேசம் தேவையா என்று புதுச்சேரி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் வைத்திலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் இன்று (மார்ச் 25) கூறியதாவது:
"புதுச்சேரியில் அனைத்து அதிகாரமும் உள்துறை அமைச்சகத்திடம் இருக்கும்போது தேர்தலே தேவையில்லை. உள்துறை அமைச்சகமே செயல்படட்டும். சட்டப்பேரவைக்கு மேலாக ஒருவர் அமர்ந்துகொண்டு மக்களால் தேர்வான பிரதிநிதிகளை தாண்டி ஆட்சி செய்வது வாக்களித்த மக்களை அவமானப்படுத்தும் விசயமாகும். யூனியன் பிரதேசம் தேவையா?
ஆட்சி அதிகாரமே இல்லையென்றால், தேர்தலில் வெற்றி பெற்றால் கூட என்ன சாதிக்கப்போகிறார்கள். யூனியன் பிரதேசம் என்ற வார்த்தையை எடுத்துவிட வேண்டும். இது ஒரு அடிமை சாசனம். அதிகாரம் இல்லாத முதல்வர் பதவி இங்கு எதற்கு?".
இவ்வாறு வைத்திலிங்கம் தெரிவித்தார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போதும் இதைச் செய்யாமல் மக்களை ஏமாற்றத்தானே செய்தது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "மக்களை நாங்கள் ஏமாற்றவில்லை. பெரும்பான்மை இல்லாததால் அதை நிறைவேற்றவில்லை. மத்தியில் பெரும்பான்மை வரும்போது யூனியன் பிரதேசம் என்ற வார்த்தை கண்டிப்பாக நீக்கப்படும்" என்று தெரிவித்தார்.