Published : 25 Mar 2021 03:10 PM
Last Updated : 25 Mar 2021 03:10 PM

ஒரே நாளில் 54 தமிழக மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படை

ராமேசுவரம்

தமிழக மீனவர்களின் 5 படகுகளைச் சிறைப் பிடித்த இலங்கைக் கடற்படையினர், படகுகளில் இருந்த 54 மீனவர்களைக் கைது செய்தனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் நேற்று (மார்ச் 24) காலை 500-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். புதன்கிழமை இரவு மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இரண்டு விசைப் படகுகளையும் அதிலிருந்து 20 மீனவர்களையும் எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கைக் கடற்படையினர் ரோந்துப் பணியின் போது கைது செய்தனர்.

மேலும் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்காலைச் சேர்ந்த ஒரு விசைப்படகையும் அதிலிருந்த 14 மீனவர்களையும், திருகோணமலை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 2 விசைப்படகையும் அதிலிருந்த 20 மீனவர்கள் என மொத்தம் 54 தமிழக மீனவர்களை ஒரே நாளில் இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.

இலங்கையில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் இரணை தீவிலும், காரைக்காலைச் சேர்ந்த 14 மீனவர்கள் காரை நகரிலும், நாகப்பட்டினத்தைச் சார்ந்த 20 மீனவர்கள் திருகோணமலையிலும் வியாழக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டனர். அங்கு கரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x