Last Updated : 24 Mar, 2021 04:11 PM

 

Published : 24 Mar 2021 04:11 PM
Last Updated : 24 Mar 2021 04:11 PM

ஐ.நா. மன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாகச் செயல்பட்ட இந்தியா: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

ஐ.நா. மன்றத்தில் இலங்கை போர்க் குற்றம் தொடர்பான வாக்கெடுப்பில் இந்தியா கலந்துகொள்ளாததன் மூலம் இலங்கைக்கு ஆதரவாகச் செயல்படுவது பட்டவர்த்தனமாகத் தெரிந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

கந்தர்வகோட்டை தொகுதி வேட்பாளர் எம்.சின்னத்துரை ( மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), புதுக்கோட்டை தொகுதி வேட்பாளர் வி.முத்துராஜா (திமுக) ஆகியோரை ஆதரித்து வீரப்பட்டி, புதுக்கோட்டை, சத்தியமங்கலம் மற்றும் மேலூர் ஆகிய இடங்களில் இன்று (மார்ச் 24) ஜி.ராமகிருஷ்ணன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

’’அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் தமிழுக்கு ஆபத்து ஏற்படும். தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் இந்தியில் வெளியிடப்படுகிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற திட்டத்தோடு பாஜகவினர் தேச ஒற்றுமையைச் சிதைக்கப் பார்க்கின்றனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் ஆதரித்துவிட்டு விவசாயிகளுக்கு ஆதரவானவர் எனக் கதை விடுகிறார் தமிழக முதல்வர் பழனிசாமி.

தமிழ்நாட்டில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மனுக் கொடுக்கச் சென்றவர்களை சுட்டுத் தள்ளியதில் 13 பேர் உயிரிழந்தனர்.

சாத்தான்குளத்தில் தந்தையும், மகனும் காவல்நிலையத்திலேயே கொலை செய்யப்பட்டனர். இவ்வளவும் செய்துவிட்டு சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக உள்ளது எனத் தமிழக முதல்வர் பழனிசாமி கூறுகிறார்.

கல்விக் கொள்கையில் கல்வி தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசு கூறுவதை அதிமுக ஆதரிக்கிறது. அரசே நிர்வகித்து வரும் கோயில் நிர்வாகத்தை தனியார் வசமாகிய பூசாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறது பாஜக தேர்தல் அறிக்கை. ஆகவேதான் சொல்கிறோம் அதிமுக, பாஜக ஆபத்தானது என்று. தமிழகத்தில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்’’.

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

பின்னர், புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ’’ஐ.நா. மன்றத்தில் இலங்கை போர்க் குற்றம் தொடர்பான வாக்கெடுப்பில் இந்தியா கலந்துகொள்ளாததன் மூலம் இலங்கைக்கு ஆதரவாகச் செயல்படுவது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமுறைகள் மற்றும் பணப் பட்டுவாடா தொடர்பாக முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதிமுக, பாஜக எதிர்ப்பு அலை தமிழகத்தில் வீசுவதைக் கண்கூடாகக் காண முடிகிறது’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x