Published : 24 Mar 2021 03:13 AM
Last Updated : 24 Mar 2021 03:13 AM
மத்திய அரசிடம் இருந்து 10 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு சில தினங்களில் வரவுள்ளன என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநிலஅரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக சுகாதாரம், காவல்,உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முன்களப் பணியாளர்களுக்கும், 2-வது கட்டமாக கடந்த 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயது முதல் 59 வயது வரையுள்ள இணைநோய் பாதிப்புள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு 28 நாட்கள் நிறைவடைந்தவர்களுக்கு 2-ம் தவணையாக தடுப்பூசிபோடப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு ரூ.150 மற்றும் சேவைக்கட்டணம் ரூ.100 என ரூ.250 கட்டணத்தில் தடுப்பூசி போடப்படுகிறது.
இதுவரை 22 லட்சம் டோஸ்தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரும் ஏப்.1-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா தடுப்பூசிபோடும் பணி சிறப்பாக நடைபெறுகிறது. பொதுமக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுச் செல்கின்றனர். மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பின்படி ஏப்.1-ம் தேதி முதல்45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும்.
மத்திய அரசிடமிருந்து இதுவரை 34 லட்சம் கோவிஷீல்டு, 5 லட்சம் கோவேக்சின் என 39 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் தமிழகத்துக்குவந்துள்ளன. இதில், 22 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 10 நாட்களுக்குத் தேவையான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. சில தினங்களில் மத்திய அரசிடமிருந்து 10 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளன.
இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT