Last Updated : 24 Mar, 2021 03:14 AM

 

Published : 24 Mar 2021 03:14 AM
Last Updated : 24 Mar 2021 03:14 AM

கோவையில் அதிகரிக்கும் கரோனா தொற்று: விதிகளைப் பின்பற்றுமா அரசியல் கட்சிகள்?

கோவையில் கரோனா தொற்று அதிகரித்துவரும் சூழலில், மக்கள் அதிகம் கூடும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மக்களுக்கு முன்னுதாரணமாக அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் நோய் தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தமிழகத்தில் குறைந்து காணப்பட்ட கரோனா பாதிப்பு மார்ச்மாதத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 1382 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 10 பேர் உயிரிழந்தனர். இதில் 2 பேர் கோவையைச் சேர்ந்தவர்கள். கோவை மாவட்டத்தை பொறுத்த வரை நேற்று முன்தினம் 130 பேருக்குதொற்று உறுதி செய்யப்பட்டது.

இத்தகைய சூழலில், கரோனா பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்த மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முகக்கவசம் அணிய செய்தல், சமூக இடைவெளியை கடைபிடிக்க செய்தல், கிருமி நாசினி தெளித்தல் ஆகியவற்றோடு, தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்தி வருவதாக மாநகராட்சி சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் தொற்று பரவல் அதிகரிப்புக்கு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காதது மற்றும் முகக்கவசம் அணியாததே முக்கிய காரணமாக கூறுகின்றனர் கோவை மாநகராட்சி அதிகாரிகள். குறிப்பாக தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. பிரச்சாரத்துக்குகூடும் பொதுமக்கள் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிவ தையோ, தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதையோ காண இயலவில்லை. அரசியல் கட்சித் தலைவர்களே கூட முகக்கவசங்கள் அணிவதில்லை.

இதுகுறித்து கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜ்குமார் கூறும்போது, “ஓரளவு கட்டுக்குள் இருந்த கரோனா, சமீப நாட்களாக அதிகரிப்பதற்கு தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் விதிமுறைகளை கடைபிடிக் காதது முக்கிய காரணமாகும். கூட்டங்களில் பங்கேற்று பேசும்கட்சி தலைவர்களும் முகக்கவசம் அணிவதில்லை. அப்படியிருக்கும் போது பொதுமக்கள் பின்பற்றுவது கடினமே.

விதிமுறைகளை கட்சித் தலைவர்கள் பின்பற்றுவதோடு, பொதுமக்களையும் கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும். ஒருசில தலைவர் களை தவிர, யாரும் இதை வலியுறுத்துவதில்லை.

இரு தினங்களுக்கு முன் கோவையில் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற ஒரு கட்சியின்துணைத் தலைவருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவருடன் இருந்த கட்சியின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள்,தொழில்துறையினர் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசியுள்ளனர். இதுபோன்ற முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தாமல், சாலைகளில் முகக்கவசம் அணியாமல் நடந்து செல்வோரை பிடித்து அபராதம் விதிப்பதால் மட்டும் கரோனாவை கட்டுப்படுத்தி விட முடியாது” என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் நோய் தடுப்பு விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். நாங்களும் அதையே வலியுறுத்துகிறோம். ஆனால் தற்போதைய சூழலில் மாவட்ட நிர்வாகம் தான் இதற்கான விதிகளை அறிவிக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x