கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் வசூல் செய்வது உள்பட சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

கரோனா பரவல் உலகை அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்திலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்பைக் குறைக்க 5 முறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் கரோனா பாதிப்பு குறையவில்லை.

எனவே, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு அதிக அபராதம் விதிக்கவும், ஊரடங்கு உத்தரவை முழுமையாகக் கடைபிடிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது.

பின்னர் நீதிபதிகள், கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கெனவே வகுக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது பேரிடர் தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

எனவே, கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி அபராதம் வசூலிப்பது உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டு மனுவை முடித்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in