

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடிக்கு அதிமுக ஒன்றியக் கவுன்சிலர் வரவேற்பு கொடுத்ததால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
காரைக்குடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி இன்று வைரவபுரம், தேவகோட்டை ரஸ்தா, அமராவதிபுதூர், திருவள்ளுவர் தெரு, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.
அமராவதி புதூர் அண்ணாநகருக்கு சென்ற அவருக்கு அதிமுக ஒன்றியக் கவுன்சிலர் தமிழ்ச்செல்வி மற்றும் அப்பகுதி மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
அதிமுக கவுன்சிலர் வரவேற்பு கொடுத்ததால் காங்கிரஸார் உற்சாகமடைந்தனர். மேலும் வேட்பாளர் மாங்குடி அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டு, தான் வெற்றி பெற்றால் உடனடியாக செய்து தருவதாக உறுதியளித்தார்.
இதுகுறித்து ஒன்றியக் கவுன்சிலர் தமிழ்ச்செல்வி கூறுகையில், ‘‘நான் அதிமுகவில் இருந்து விலகவில்லை. எங்கள் பகுதிக்கு வந்ததால் வரவேற்றேன்.
மற்றபடி நான் அதிமுகவில் தான் இருக்கிறேன். மேலும் எங்கள் பகுதி மக்கள் இந்த முறை காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடிக்கு தான் ஆதரவு தெரிவித்துள்ளனர்,’’ என்று கூறினார்.
அதிமுக கவுன்சிலர் ஒருவர் தங்களது பகுதியைச் சேர்ந்தவர்களோடு காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த சம்பவம் பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.