

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்காக 189 இடங்கள் உள்ளன. இவற்றில் தமிழக அரசு நடத்தும் நுழைவுத் தேர்வு மூலம் இங்குள்ள டாக்டர்கள் சேர்ந்து படிக்கின்றனர். தமிழக உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் பிற மாநிலத்தவருக்கு இடங்களை ஒதுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரைத் துள்ளது. அப்படி செய்தால், அது தமிழகத்துக்கு இழப்பை ஏற்படுத்தும். எனவே, மாநில அரசுகளின் மருத்துவக் கல்வி இடங்கள், அந்த மாநில மாணவர்களுக்கே என்பதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவக் கல்வியில் அகில இந்திய தொகுப்பு முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
மருத்துவக் கல்லூரிகளை பின்தங்கிய மாநிலங்களில் தொடங்க வேண்டும். அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மருத்துவக் கல்லூரிகளை மாநில அரசுகளே தொடங்க வேண்டும். மருத்துவக் கல்வி தனியார்மயமாவதை தடுக்க வேண்டும். உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் நாடு முழுவதும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு முத்தரசன் கூறியுள்ளார்.