

தேர்தல் பிரச்சாரத்துக்கு, அமைச்சர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் கடுமையான விதிகளைக் கொண்டுவர வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த விதிகளைத் தற்போதைய தேர்தலில் அல்லாமல், எதிர்வர இருக்கும் தேர்தல்களுக்கு அமல்படுத்தலாம் என உத்தரவிட்டனர்.
தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வகுக்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளில், முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் தங்கள் அலுவல் சார்ந்த பணியுடன், தேர்தல் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும், அரசு வாகனங்களைத் தேர்தலுக்குப் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
அரசுப் பதவி வகிக்கும் அமைச்சர்கள், தங்கள் கட்சி வேட்பாளர்களுக்குப் பிரச்சாரம் செய்வது வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய தடைவிதிக்கக் கோரி, அஹிம்சா சோசியலிஸ்ட் கட்சி நிறுவனத் தலைவர் ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “தேர்தல் பிரச்சாரத்தின்போது, அமைச்சர்கள் தங்கள் அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்களா? எனக் கண்காணிக்க எந்த நடைமுறையும் இல்லை என்பதால், அரசு சம்பளம் பெறும் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது எனத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய மனுவைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஏற்கெனவே தேர்தல் நடத்தை விதிகள் உள்ளன. அதன் அடிப்படையில் தேர்தல் அதிகாரிகளுக்கு இது சம்பந்தமாக உரிய அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
இருப்பினும், தேர்தல் பிரச்சாரத்துக்கு, அமைச்சர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் கடுமையான விதிகளைக் கொண்டுவர வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த விதிகளைத் தற்போதைய தேர்தலில் அல்லாமல், எதிர்வர இருக்கும் தேர்தல்களுக்கு அமல்படுத்தலாம் எனவும் தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தனர்.