தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பாலசுப்ரமணியன் நியமிக்கப்பட்டது செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பாலசுப்ரமணியன் நியமிக்கப்பட்டது செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

Published on

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பாலசுப்ரமணியன் நியமனம் செய்யப்பட்டது செல்லாது எனத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்த பேராசிரியர் ரவீந்திரன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பாலசுப்ரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் துணைவேந்தராக நியமனம் செய்வதற்கான உரிய கல்வித் தகுதியைப் பெற்றிருக்கவில்லை. அவரது நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு விதிகள் பின்பற்றப்படவில்லை. எனவே, பாலசுப்ரமணியன் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவைக் கடந்த ஆண்டு விசாரித்த தனி நீதிபதி, பாலசுப்ரமணியன் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் பாலசுப்ரமணியன் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு விசாரித்து, பாலசுப்ரமணியன் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டது செல்லாது எனத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in