

திருப்பதிக்கு இணையாகத் திருநள்ளாறு தொகுதி மேம்படுத்தப்படும் என பாஜக வேட்பாளர் ராஜசேகரன் இன்று வாக்குச் சேகரித்தார்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக் கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன், திருநள்ளாறு வள்ளலார் நகர், இந்திரா நகர், பி.எஸ்.நகர், நளன் குளம் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று (மார்ச் 23) தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது ராஜசேகரன் பேசும்போது, ''குடிசைகள் இல்லாத பகுதியாகத் திருநள்ளாற்றை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். திருநள்ளாற்றை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் கோயில் நகரத் திட்டப் பணிகளுக்கு இன்னும் கூடுதலாக நிதி பெற்று, தொய்வடைந்துள்ள கோயில் நகரத் திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்படும். திருப்பதி தேவஸ்தானத்துக்கு இணையாகத் திருநள்ளாற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயில் மேம்படுத்தப்படும். மக்களிடையே தற்போது நிலவும் ரேஷன் கார்டு பிரச்சினைகளைக் களைந்து, தகுதியானவர்களுக்கு சிவப்பு நிற ரேஷன் கார்டு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மக்களுக்குப் பல்வேறு அடிப்படை வசதிகளைச் செய்து தருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்'' என்று தெரிவித்தார்.
அப்போது பாஜக மற்றும் கூட்டணிக் கட்சியினர் உடனிருந்தனர்.