Published : 23 Mar 2021 12:12 PM
Last Updated : 23 Mar 2021 12:12 PM

டிடிவி தினகரனின் உயர்வுக்காக நாங்கள் உழைத்தோம்: அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு

தூத்துக்குடி

டிடிவி தினகரனின் உயர்வுக்காக நாங்கள் உழைத்தோம். நன்றி மறந்தது நாங்கள் இல்லை, அவர்தான் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, ''திஹார் சிறையில் இருந்தபோது வெளியே வரப் பணமின்றி தினகரன் தவித்தார். அப்போது தளவாய் சுந்தரம் மூலம் பணம் செலுத்தப்பட்டது. நாங்கள்தான் டிடிவி தினகரனின் உயர்வுக்காக உழைத்துள்ளோம். நன்றி மறந்தது நாங்கள் இல்லை, அவர்தான்.

கட்சியில் எந்த ஒரு பொறுப்புக்கும் அவர் எனக்கு சிபாரிசு செய்ததில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு முறை எனக்கு எதிராக மாணிக்க ராஜாவுக்கு சீட் வாங்கித் தரவேண்டும் என்று முழு மூச்சோடு பணியாற்றியவர் தினகரன். ஆனால், ஜெயலலிதா எனக்கு வாய்ப்பளித்தார்.

இந்த நிலையில் நான் எதற்கு அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்? அவர்தான் எனக்கு நன்றிக் கடனுடன் இருக்க வேண்டும். ஏனெனில் திஹாரில் இருந்து தினகரன் வந்த நேரத்தில் ஒருவர் கூட அவரை எட்டிப் பார்க்கவில்லை. அந்த நேரத்தில் அமைச்சராக இருந்தும்கூட நான் சென்று எட்டிப் பார்த்தேன்'' என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

முன்னதாக, நேற்று கோவில்பட்டியில் பிரச்சாரத்தின்போது தனது காரை வழிமறித்து அமமுகவினர் பட்டாசு வெடித்ததாகவும், இதனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவானதாகவும், அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜு தெரிவித்திருந்தார்.

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x