

தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொள்ளும் அனைவரும் கட்டாயம்முகக் கவசம் அணிய வேண்டும் என்று காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் ஏப்.6-ம்தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிரபிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரம் கரோனா பரவலும் அதிகரித்து வருகிறது.
கரோனா வேகமாக பரவுவதற்கு அரசியல் கட்சியினரின் பிரச்சாரங்களும் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. பிரச்சாரத்தில் அனைவரும் கூட்டமாக கலந்து கொள்கின்றனர். சமூக இடைவெளி என்பது அங்கு கடைபிடிக்க முடியாதது. அதில் பெரும்பாலானவர்கள் முகக் கவசமும் அணிவதில்லை.
இதனால் கூட்டத்தில் இருப்பவர்கள் மூலம் கரோனா பரவலும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. கரோனா பரவலைதடுக்க போலீஸாரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ரூ.200 அபராதம்
இந்நிலையில், “பிரச்சாரத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணியவேண்டும். முகக் கவசம் அணியாமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்க வேண்டும். அந்தந்த எல்லைக்கு உட்பட்ட போலீஸார் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஆய்வு செய்து, கரோனாவை பரப்பும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்’’ என்று தமிழக காவல் துறை அறிவித்துள்ளது.
இதற்கிடையில், அனைத்துகாவல் நிலையங்களிலும் மீண்டும் கரோனா கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் காவல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.