Published : 23 Mar 2021 03:14 AM
Last Updated : 23 Mar 2021 03:14 AM

முதல்வர் பதவி ஸ்டாலினின் தந்தைக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா? - சேலம் பிரச்சாரத்தில் முதல்வர் கேள்வி

அண்ணா மறைவுக்கு பின்னர் கருணாநிதி முதல்வராக பொறுப் பேற்றதைபோல ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நான் முதல் வராகியுள்ளேன். ஸ்டாலின் தந்தைக்கு ஒரு நியாயம், எனக் கொரு நியாயமா என தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மணியை ஆதரித்து தீவட்டிப்பட்டியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

சேலம் மாவட்டம் அதிமுக-வின் எஃகு கோட்டையாக விளங்குகிறது அண்ணா முதல்வராக இருந்த போது, உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அண்ணாவை நம்பிதான் மக்கள் ஓட்டு போட்டு முதல்வராக்கினார்கள். அண்ணா மறைவுக்கு பின்னர் கருணாநிதி முதல்வர் பொறுப்பை ஏற்றார். அதேபோல, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதல்வராக நான் பொறுப்பேற்றேன்.

திமுக தலைவர் ஸ்டாலின் தந்தைக்கு ஒரு நியாயம், எனக்கொரு நியாயமா. திமுக ஆட்சிக்கு வந்தால் மக்களை அடிமையாக நடத்துவார்கள். எனக்கு முதல்வர் என்ற எண்ணமே இல்லை. பொதுமக்களாகிய நீங்கள் தான் முதல்வர்.திமுக தில்லுமுள்ளு செய்து வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் உள்ளனர்.

நாம் ஏமாந்து விடாமல் விழிப்புடன் இருந்து திமுக-வை படுதோல்வி அடைய வைத்து விரட்டிட வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x