Published : 23 Mar 2021 03:14 AM
Last Updated : 23 Mar 2021 03:14 AM

வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக: அன்புமணி ராமதாஸுக்கு பிடிவாரண்ட்

விழுப்புரம்

வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அன்புமணி ராமதாஸ்க்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வன்முறையைத் தூண்டும் விதமாகவும், கலவரத்தைத் தூண்டும் வகையிலும் பேசியதாக பாமக இளைஞரணித் தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் மீது கடந்த 2013-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் எம்.பி, எம்எல்ஏக்களை விசாரிக்கும் முதலாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து, அன்புமணிக்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு விசாரணையின்போது, இந்த உத்தரவு நகலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அன்புமணிக்கு விலக்கு பெறப்பட்டது. குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு பின் இந்த உத்தரவு காலாவதியாகி விடுவதால் புதுப்பித்து உத்தரவு பெறவேண்டும். அவ்வாறு பெறப்பட்ட உத்தரவை நீதிமன்றத்தில் அன்புமணிக்கு ஆஜராகும் வழக்கறிஞர் சமர்பிக்காததால், நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அன்புமணிக்கு பிணையில் வெளியே வரமுடியாதபடியான பிடியாணை (பிடிவாரண்ட்) வழங்கி நடுவர் அருண்குமார் உத்தரவிட்டார்.

இது குறித்து அன்புமணிக்காக ஆஜராகும் வழக்கறிஞர் ராஜாராமனிடம் கேட்டபோது, “இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அன்புமணி தாக்கல் செய்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் கடந்த 8-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்புமணியின் பேச்சு குறித்து காவல்துறை வழக்குப் பதிந்துள்ளதாகவும், அதை ஆராய்ந்து நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டுமென்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அன்புமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து நடுவர் பதி உத்தரவிட்டார். ரத்து செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகவில்லை என்று எப்படி நடுவர் மன்றம் பிணையில் வெளியே வரமுடியாத பிடியாணை பிறப்பித்தது என்று தெரியவில்லை” என்றார்.

இது குறித்து அரசு வழக்கறிஞர் ஜம்புலிங்கத்திடம் கேட்டபோது, “சென்னை உயர்நீதிமன்றத்தில் என்ன நடைபெற்றது என்று தெரியாது. இதுவரையில் அதுபோன்ற எந்த உத்தரவு நகலும் இவ்வழக்கை நடத்தும் நடுவர் மன்றத்திற்கு கிடைக்கவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x