

கர்நாடகத்தில் வீணாகும் மழை நீரை தமிழகத்துக்கு திருப்பிவிட மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன்.
கும்பகோணத்தில் சனிக் கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: காவிரி நீர் பங்கீட்டு விஷயத்தில் தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாஜக முழு ஆதரவைத் தரும். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், மத்திய அமைச்சர் உமாபாரதி தெரிவித்த கருத்துகள் நமக்கு சாதகமாக உள்ளன. தமிழகத்துக்கு நியாயமான உரிமைகள் கிடைக்கும் என நம்புவோம்.
கர்நாடக மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மே மற்றும் ஜூன் மாதங்களில் பெய்யும் மழைநீர் சுமார் 2,200 டி.எம்.சி. அளவுக்கு அரபிக் கடலில் கலக்கிறது. இது கர்நாடக மாநிலத்துக்கும் பயனளிக்கவில்லை. இந்த தண்ணீரை மேலேற்றும் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு திருப்பிவிட்டால் சுமார் 1,000 டி.எம்.சி-யாவது தமிழகத்துக்கு கிடைக்கும். இதற்கு ஒரு முறை மட்டுமே செலவு செய்தால் போதுமானது என என்னை சந்தித்த தஞ்சை விவசாயிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் பிரதமரை நேரில் சந்திக்கும்போதும் வலியுறுத்துவேன் என்றார்.