Published : 22 Mar 2021 08:24 PM
Last Updated : 22 Mar 2021 08:24 PM

சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அதிகரிக்கும் கரோனா தொற்று: கூடுதல் பரிசோதனை செய்ய அரசு முடிவு

தமிழ்நாட்டில் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் மூலமாகவும், அரசு மற்றும் தனியார் ஆய்வகங்கள் மூலமாகவும் பிசிஆர் மாதிரிகள் எடுத்து வரும் நிலையில், மக்கள் கூடும் இடங்களிலும் மாதிரிகள் எடுப்பதற்கு கூடுதலாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“இந்தியாவில் ஒருசில மாநிலங்களில் கரோனா நோய்த்தொற்று அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் நோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், 16.3.2021 மற்றும் 17.3.2021 ஆகிய நாட்களில் ஆய்வுக்கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கியுள்ளார். மேலும், இன்று (22.3.2021) தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளருடன் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திருவள்ளுர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், திருப்பூர், சேலம், மதுரை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அதற்கு முந்தைய வாரத்தில் நோய்த் தொற்றை ஒப்பிடும்போது கடந்த வாரம் நோய்த் தொற்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை விரிவுபடுத்தவும், குறிப்பாக நோய்த் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் தனி கவனம் செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையைப் பொறுத்தமட்டில், அண்மையில் பெருங்குடி, தரமணி மற்றும் கந்தன்சாவடி ஆகிய மூன்று இடங்களில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்தில் முதலில் 4 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டவுடன், அவர்களோடு உடனிருந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்த 364 நபர்களுக்குப் பரிசோதனை செய்ததில், 40 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டது இன்று தெரியவந்துள்ளது.

இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை அளித்து, மற்றவர்களுக்கு நோய்த் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக இந்த நிறுவனத்தை மூடுவதற்கும், கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வதற்கும் பெருநகர சென்னை மாநகராட்சியால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர, தமிழ்நாட்டில் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் மூலமாகவும், அரசு மற்றும் தனியார் ஆய்வகங்கள் மூலமாக பிசிஆர் மாதிரிகள் எடுத்து வரும் நிலையில், மக்கள் கூடும் இடங்களிலும் மாதிரிகள் எடுப்பதற்கு கூடுதலாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று பாரிமுனை மற்றும் சந்தைப் பகுதிகளில் ஆங்காங்கே காய்ச்சல் முகாம்கள் நடத்தி பிசிஆர் பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நோய் அதிகமுள்ள இடங்களில் தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள், பாதுகாப்புக் கவசங்கள், முகக்கவசங்கள் மற்றும் பிராணவாயு கருவிகளும் தயார் நிலையில் உள்ளன.

கடந்த 4 நாட்களில் 38,722 நபர்களுக்கு கோவிட் சார்ந்த பழக்கங்களான, முகக்கவசம் அணிவது மற்றும் நிறுவனங்களில் நிலையான வழிமுறைகளைப் பின்பற்றுவது போன்றவற்றை மீறிய காரணங்களுக்காக 83 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை சுமார் 21 லட்சம் நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். சுகாதாரப் பணியாளர்கள், இதர முன்களப் பணியாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்துப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் வயது வரம்பின்றித் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

மற்றவர்களைப் பொறுத்தமட்டில், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், 45 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்ட இணை நோய் உள்ளவர்கள், அரசு மருத்துவ நிலையங்களில் தாமாக முன்வந்து இலவசமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நோய்த் தொற்று அறிகுறி இருந்தால், உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற வேண்டும். இதனைக் கடைப்பிடித்து, கோவிட் நோய்த் தொற்று பரவாமல் இருக்க அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அரசு கேட்டுக்கொள்கிறது”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x