

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் தேசியக்கொடி பொறித்த கேக்கை வெட்டியதாக அப்போதைய கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துணை ஆணையருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யும்படி, கோவை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில், 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மத நல்லிணக்கத்துக்காகவும், ஒருமைப்பாட்டுக்காகவும் நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில், தேசியக்கொடி பொறிக்கப்பட்டிருந்த கேக்கை வெட்டி, உண்டதாகக் கூறி, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அப்போதைய மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், காவல் துணை ஆணையர் பர்வேஷ் குமார் ஆகியோருக்கு எதிராக இந்து பொது கட்சியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கோவை நீதிமன்றத்தில் புகார் மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த கோவை நடுவர் நீதிமன்றம், தேசியக்கொடியை அவமதித்ததாக ஆட்சியர் மற்றும் துணை ஆணையர் மீது வழக்குப் பதிவு செய்யக் காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் புகார் மனுத் தாக்கல் செய்யப்பட்டதாகவும், அரசு ஊழியர்கள் மீது அரசின் முன் அனுமதியின்றி வழக்குத் தொடரும்படி உத்தரவு பிறப்பித்திருக்கக் கூடாது எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சம்பவத்தின் நேரடி சாட்சியாக இல்லாத, புகார்தாரரான செந்தில்குமார், பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் அளித்த புகாரின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாகக் கூறி, கோவை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
சுதந்திர தினம், குடியரசு தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பவர்கள், தேசியக்கொடியைச் சட்டையில் அணிவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, நிகழ்ச்சி முடிந்தபின் கொடியை அணிந்திருக்க மாட்டார்கள். இதை தேசியக்கொடியை அவமதித்ததாகக் கருத முடியாது எனவும், அப்படிக் கருதினால், தேசியக்கொடியைக் கையாளத் தயக்கம் காட்டுவர் எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.