

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இடம்பெற்ற சுசி கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் இருவரும் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.
புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சுசி கம்யூனிஸ்ட் கட்சியினர் இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக இருந்தது. அதன்படி காமராஜ் நகர் தொகுதியில் லெனின் துரையும், கதிர்காமம் தொகுதியில் சரவணனும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். அவர்கள் இருவரும் மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில் இருவரும் திடீரென்று இன்று வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றனர்.
இதுபற்றி சுசி கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் லெனின்துரையிடம் கேட்டதற்கு, "மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இரு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்தோம். எங்கள் கட்சி உரிய ஆவணங்களை உரிய நேரத்தில் தரவில்லை. அதனால் மக்கள் நீதி மய்ய வேட்பாளராகப் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. எங்களுடைய கட்சியானது வேறு கட்சியின் பெயரில் தேர்தலில் போட்டியிடுவதை ஏற்காது. அதனால் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றுவிட்டோம்" என்று குறிப்பிட்டனர்.