அமமுகவினரின் அராஜகத்தால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்: அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றச்சாட்டு

அமமுகவினரின் அராஜகத்தால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்: அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றச்சாட்டு
Updated on
2 min read

அமமுகவினரின் அராஜகச் செயல்களால் கார் தீப்பிடித்து, எனது உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டிருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கயத்தாறு அருகே தலையால் நடந்தான் குளம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் கடம்பூர் செ.ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுகதான் மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்ற மனநிலை மக்களிடம் உள்ளது. இதனைப் பிரச்சாரத்துக்குச் செல்லும் இடங்களில் கண்கூடாகப் பார்க்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி உள்ளேன். இதனால் எனது வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நாங்கள் பிரச்சாரத்துக்குச் செல்வதுபோல் அமமுவினரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். எனக்குப் பெருகிவரும் ஆதரவைப் பார்த்து, தோல்வி பயத்தால் எனது பிரச்சாரப் பயணத்தை முடக்கி, தேர்தல் சுற்றுப்பயணத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என எண்ணுகின்றனர்.

நேற்றைய தினம் பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு இரவு கோவில்பட்டி அன்னை தெரசா நகர் பகுதிக்குச் சென்றேன். அப்போது அங்கு அமமுவினருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தால், ஒரே சமயத்தில் நாங்கள் இருவரும் சந்திக்கும் நிலை வந்தது.

கோவில்பட்டியில் கடந்த 10 ஆண்டு காலத்தில் அனைத்துச் சமுதாய மக்களும் அமைதியாக வாழும் சூழ்நிலை உருவாக்கியுள்ளேன். அவர்கள் அந்த இடத்துக்கு வரும்போது வீணான பிரச்சினைகள் வேண்டாம் என்பதை மனதில் வைத்து அங்கு பிரச்சாரத்தைத் தவிர்த்துவிட்டு உடனடியாகப் புறப்பட்டேன். அப்போது எதிரே அமமுகவினரின் வாகனங்கள் வந்தன. தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகும். நீங்கள் செல்லுங்கள். நான் தனியாகச் செல்கிறேன் என என்னுடன் வாகனங்களில் வந்தவர்களிடம் கூறினேன்.

நான் புறப்பட்டு வரும்போது எதிரே வந்த அவர்கள், என் காருக்கு வழிவிடாமல் சாலையை மறித்தனர். நான் அமைதியாக இருந்தேன். எனது ஓட்டுனரிடம் அவர்கள் சென்ற பின்னர் நாம் புறப்படலாம் என கூறினேன். 2 நிமிடங்கள் பொறுத்திருந்தால் நான் அந்த இடத்தைக் கடந்து இருப்பேன்.

ஆனால், திட்டமிட்டு எனது கார் நகர்வதற்கு முன் வழிமறித்ததோடு 5 ஆயிரம் வாலா பட்டாசை எனது காரைச் சுற்றி வெடித்தனர். இதனால் புகைமூட்டமாகி எனது கார் தீப்பிடிக்கும் சூழல் உருவானது. இதில் அசம்பாவிதம் ஏற்பட்டு இருந்தால், கார் தீப்பிடித்து எனது உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் இதற்கெல்லாம் நான் அஞ்சப்போவதில்லை.

இது எனது தேர்தல் சுற்றுப்பயணத்தைத் தடுப்பதற்காகத் திட்டமிட்டுச் செய்யப்பட்ட அராஜகச் செயல். நான் அந்த வேட்பாளரின் பெயரைக் கூற விரும்பவில்லை. அவருக்குப் பதிலாக ஏஜென்டாக வேலை பார்ப்பவரின் பெயரையும் சொல்ல விரும்பவில்லை. இந்த சம்பவம் நடந்தபோது அவர் சுமார் 10 அடி தூரத்தில்தான் இருந்தார். ஆனால் அவர் தடுக்கவில்லை.

நாங்கள் எம்ஜிஆர் பாதையில் அரசியலுக்கு வந்தவர்கள். இதுபோன்ற பிரச்சினைகள் யார் மூலம் வந்தாலும் துணிச்சலாக எதிர்கொள்வோம். இதுபோன்ற செயலால் மக்கள் முகம் சுளிக்க தொடங்கி விட்டனர். நான் வேட்பாளர் மட்டுமல்ல அமைச்சரும் கூட. எனக்கே இந்த நிலையை உருவாக்கினார்கள் என்றால், இவர்கள் தொகுதிக்குள் வந்தால் என்ன நிலை வரும் என மக்கள் இப்போதே விவாதிக்கத் தொடங்கிவிட்டனர்.

இதற்காக நான் பாதுகாப்பு கேட்கப் போவதில்லை. நான் தனியாக ஒரு வாகனத்தில் மட்டும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபடத் தயாராக உள்ளேன். நான் மக்களைச் சந்திப்பதைத் தடுக்க எந்த சக்தியாலும் முடியாது.இவர்களின் இதுபோன்ற செயலால் நான் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயமாக வெற்றி பெறுவேன். இனி மக்கள் முடிவு செய்வார்கள்''.

இவ்வாறு கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in