

தாலிக்கு தங்கத்தை இலவசமாக கொடுத்துவிட்டு, டாஸ்மாக் வழியாக அதைப் பறிக்கின்றனர் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
கோவை சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், சிங்காநல்லூர் வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்துகமல்ஹாசன் பேசியதாவது:
நல்ல திட்டங்கள் இருந்தால் இலவசங்கள் கொடுக்க வேண்டியதில்லை. எல்லா ஊர்களிலும் ஆரம்பப் பள்ளிகள் மோசமாக உள்ளன. குடிநீர், உணவு, கல்வி ஆகியவை மக்கள் உரிமை. அவைஉங்களை வந்தடைய வேண்டும்.தலைவர்கள் காசுக்கு ஆசைப்படாமல் இருந்தால், அதிகாரிகள் சரியாக இருப்பார்கள்.
எம்எல்ஏ சீட்டுக்கு கட்சியில் ரூ.10 கோடி வாங்குகின்றனர். அதன்பிறகு, வேட்பாளர்கள் ரூ.20 கோடி செலவு செய்கின்றனர். இவ்வாறு முதலீடு செய்ததை மக்கள் சட்டைப்பையில் இருந்து திருப்பி எடுக்கின்றனர். ஒரு ஊழல் கட்சிக்கு, இன்னொரு ஊழல் கட்சி மாற்றாகாது.
பாதி டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டும் அரசை நடத்த முடியும்.தமிழர் ரத்தத்தில் ஆல்கஹால் ஓடுகிறது. குடியால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க வேண்டும். தாலிக்கு தங்கத்தை இலவசமாகக் கொடுத்துவிட்டு, டாஸ்மாக் வழியாக அதைப் பறிக்கின்றனர். அது எப்படி இலவசமாகும்?
இவ்வாறு அவர் பேசினார்.