Published : 22 Mar 2021 03:13 AM
Last Updated : 22 Mar 2021 03:13 AM

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்: துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. அறிவுரை

குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் க.ராமச்சந்திரனை ஆதரித்து, குன்னூர் மற்றும் கோத்தகிரியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஆ.ராசா நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதுதொடர்பாக குன்னூர் மற்றும் கோத்தகிரியில் திமுக ஊழியர்கள் கூட்டம், மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நடைபெற்றது.

அப்போது ஆ.ராசா பேசும்போது, ‘‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா துணிச்சல்மிக்கவர். அவர் இருந்தவரை தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்கவில்லை, நீட் தேர்வு வரவில்லை, ஜிஎஸ்டி அமல்படுத்தப்படவில்லை, உதய் மின் திட்டம் கொண்டுவரப்படவில்லை. அதனால் தான் பிரதமராக இருந்த நரேந்திர மோடி ,போயஸ் கார்டனுக்கு சென்று ஜெயலலிதாவை நேரில் பார்த்தார். ஆனால், ஜெயலலிதாவின் ஆட்சியை நடத்துகிறோம் என்று கூறும் தற்போதைய முதல்வர் பழனிசாமி, மாநில உரிமைகளை மத்திய அரசிடம் விட்டுக்கொடுத்து வருகிறார்.

திமுக தலைவர் ஸ்டாலின் கூறுவதை, முதல்வர் பழனிசாமி நிறைவேற்றுகிறார். பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்கவில்லையா என கேள்வி எழுப்பி வருகிறார். அன்றைய அரசியல் சூழல் காரணமாக, பாஜகவோடு திமுக கூட்டணி வைக்க நேர்ந்தது. ஆனால், குறைந்தபட்ச செயல் திட்டம் என்ற நிபந்தனையோடு கூட்டணி வைத்தது. பாஜக உருவாக்கப்பட்டதற்கான முக்கிய 3 நோக்கங்களான ராமர் கோயில் கட்டுவது, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது, பொது சிவில் சட்டம் ஆகியவை திமுக கூட்டணி இருந்தவரை நிறைவேற்றப்படவில்லை. தற்போது ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுவிட்டது. எனவே, திமுக ஆட்சிக்கு வர தொண்டர்கள் கடுமையாக உழைத்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x