

கேஸ், பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு பாஜக பொறுப்பல்ல. மத்திய அரசு மட்டும் காரணம் அல்ல. மாநில அரசுகளுக்கும் பொறுப்பு உள்ளது என்று நடிகை கவுதமி தெரிவித்தார்.
புதுச்சேரியில் பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற நடிகை கவுதமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''வரப்போகும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை இருக்கிறது. பாஜக தலைவர்களின் கொள்கைகளைப் பார்த்து 24 ஆண்டுகளுக்கு முன்பே பாஜகவில் இணைந்தேன். நமது நாட்டுக்கு ஏற்ற கட்சி பாஜகதான். அதனால்தான் பாஜகவில் இணைந்தேன்.
புதுச்சேரி மக்களுக்கு ஒரு நியாயமான ஆட்சி தேவைப்படுகிறது. அந்த ஆட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணி அளிக்கும். இந்த ஆட்சியால் புதுச்சேரிக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமையும்.
கேஸ், பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு பாஜக பொறுப்பல்ல. மத்திய அரசு மட்டும் காரணம் அல்ல. மாநில அரசுகளுக்கும் பொறுப்பு உள்ளது. இதுபற்றி பொருளாதாரம் மற்றும் நிதித் துறை சார்ந்தோரிடம் கலந்து பேசினால் தெளிவு கிடைக்கும். விலை உயர்வு பற்றி இப்போது பேச வேண்டியதில்லை. மக்களுக்கு எல்லாம் புரிந்துவிட்டது''.
இவ்வாறு கவுதமி தெரிவித்தார்.