Published : 21 Mar 2021 07:37 PM
Last Updated : 21 Mar 2021 07:37 PM

பாமக வேட்பாளர் பெயரை மாற்றிக் கூறிய முதல்வர் பழனிசாமி; அறிவியல் பூங்காவைத் தானே திறந்து வைத்ததாகப் பேசியதாலும் சலசலப்பு

திருவண்ணாமலை 

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் அமைச்சர் திறந்து வைத்த அறிவியல் பூங்காவை, நானே வந்து திறந்து வைத்தேன் என முதல்வர் கூறியது விமர்சனத்துக்கு உள்ளானது.

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஏரிக்கரை அருகே ரூ.3 கோடி மதிப்பில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டது. இதனை, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திறந்து வைத்தார். அதன்பிறகு சில பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. மேலும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு வந்த முதல்வர் பழனிசாமி, அறிவியல் பூங்காவைப் பார்வையிட்டார்.

இந்த நிலையில், திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி பேசும்போது, அறிவியல் பூங்காவை நானே நேரில் வந்து திறந்து வைத்தேன் எனத் தெரிவித்தார். அமைச்சர் வேலுமணி திறந்து வைத்ததை, நானே நேரில் வந்து திறந்து வைத்தேன் என முதல்வர் பேசியது விமர்சனத்துக்கு உள்ளானது.

பாமக வேட்பாளர் பெயரை மாற்றிக் கூறிய முதல்வர்

அதேபோல், கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி பாமக வேட்பாளர் பெயரை செல்வகுமார் என குறிப்பிடுவதற்கு பதிலாக செந்தில்குமார் எனக் குறிப்பிட்டார். பின்னர் சுதாரித்துக் கொண்டு, அடுத்த முறை படிக்கும்போது செல்வகுமார் எனத் தெரிவித்தார். கூட்டணிக் கட்சி வேட்பாளர் பெயரை மாற்றிக் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x