Published : 21 Mar 2021 02:46 PM
Last Updated : 21 Mar 2021 02:46 PM

திமுக ஆட்சியில் தமிழக உரிமைகள் மீட்டெடுக்கப்படும்; ஆட்சி தமிழகத்தில் இருந்து நடத்தப்படும்: கனிமொழி எம்.பி. உறுதி

கரூர்

திமுக ஆட்சியில் தமிழக உரிமைகள் மீட்டெடுக்கப்படும். தமிழக ஆட்சி தமிழகத்தில் இருந்து நடத்தப்படும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் வெள்ளியணையில் கிருஷ்ணராயபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரியை ஆதரித்து திமுக மகளிரணிச் செயலாளர் எம்.பி. கனிமொழி இன்று (மார்ச் 21ம் தேதி) பேசியதாவது:

''காவல்துறை உயரதிகாரி மீது புகார் அளிக்கச் சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியையே வழிமறித்து மிரட்டுகின்றனர். நீதிமன்றம் கண்டித்த பிறகே உயரதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனக்கு வேண்டியவர்களுக்காக, கட்சிகாரர்களுக்காக எந்த அளவுக்கு அராஜகத்தில் ஈடுபடுகின்றனர். தங்களுக்கு எதிரானவர்களைக் கொலை செய்யுமளவுக்கும் செல்வார்கள்.

இந்த ஆட்சி விவசாயிகளுக்கு எதிரான ஆட்சி. மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்த சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி. தமிழ்நாடு அமைதியாக இல்லை. தமிழக மக்கள் நிம்மதியாக இல்லை. எதிர்கால பயத்துடன் உள்ளனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. தமிழகத்தில் 3.50 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழக இளைஞர்களை கொண்டு நிச்சயமாக இந்த காலி இடங்கள் நிரப்பப்படும்.

கரூர் மாவட்டம் வெள்ளியணையில் கிருஷ்ணராயபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரியை ஆதரித்து திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசினார்.

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், குடியுரிமைச் சட்டங்களை பழனிசாமி ஆதரித்துவிட்டு தற்போது அச்சட்டங்களைத் திரும்பப் பெற அழுத்தம் தருவோம் என்கிறார். இதையெல்லாம் நம்ப மக்கள் முட்டாள்களா? மக்களை முட்டாளாக நினைத்தவர்கள்தான் முட்டாளாகி இருக்கின்றனர். 3 மாதங்களுக்கு முன் ஒரு நிலைப்பாடு. தேர்தல் வந்தால் ஒரு நிலைப்பாடு.

தொடர்ந்து மக்களுக்கு எதிரான சட்டங்களை, தான் பதவியில் இருக்கவேண்டும் என்பதற்காக தடுக்காமல் இருந்துவிட்டார். நீட், சிறுபான்மையினர், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை ஆதரித்தார். தமிழகத்தை எந்த அளவுக்கு சீரழிக்க முடியுமோ அந்த அளவுக்கு சீரழித்துவிட்டனர். தமிழகத்தை டெல்லியில் அடகு வைத்துவிட்டனர்.

தமிழகத்தை மீட்டெடுக்கவேண்டும். திமுக ஆட்சியில் தமிழக உரிமைகள் மீட்டெடுக்கப்படும். தமிழக ஆட்சி தமிழகத்தில் இருந்து நடத்தப்படும். பெண்களுக்கு ரூ.1,000 உரிமத் தொகை வழங்கப்படும். முதியவர்களுக்கு ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும். நகர்ப்புறங்களில் பெண்கள் பேருந்துப் பயணங்களுக்குக் கட்டணம் கிடையாது.

செல்போன் வழங்கப்படும். கல்விக் கடன் ரத்து செய்யப்படும் எனக் கூறிய எதையுமே இந்த ஆட்சி செய்யவில்லை. எதற்கும் பயன்படாத பொருட்களைத் தூக்கி எறிவதைப் போல இந்த ஆட்சியைத் தூக்கி எறியவேண்டும். திமுக அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற ஸ்டாலின் முதல்வராக வேண்டும். அவர் முதல்வராக கிருஷ்ணராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரிக்கு உதயசூரியன் சின்னத்தில வாக்களியுங்கள்''.

இவ்வாறு கனிமொழி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x