Published : 21 Mar 2021 01:54 PM
Last Updated : 21 Mar 2021 01:54 PM

அப்பா ஸ்டாலின், தலைவர் ஸ்டாலின்; என்ன வேறுபாடு?- உதயநிதி ஸ்டாலின் சுவாரஸ்யம் 

சென்னை

சினிமா என் தொழில். அரசியல் என் விருப்பம். அரசியலில் ஈடுபட மனப்பூர்வமாக விரும்பித்தான் வந்துள்ளேன். இதனால் என் தனிநபர் சுதந்திரம் போனதாக நான் நினைக்கவில்லை என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

பிரச்சாரத்தின் ஊடே தனியார் தொலைக்காட்சிக்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி:

உங்கள் வாய்ப்பு எப்படி இருக்கிறது?

சிறப்பாக இருக்கிறது. மக்களிடம் எழுச்சி இருக்கிறது. மாற்றத்திற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. திமுக வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

பெரிய பெரிய பேச்சாளர்களே வாக்காளர்களைக் கவர சிரமப்படும்போது எளிமையாகப் பேசும் நீங்கள் எப்படிக் கவர்கிறீர்கள்?

எனக்கு என்ன வருகிறதோ அதைத்தானே பேச முடியும். நீங்களே சொல்லிவிட்டீர்கள் எளிமையாகப் பேசுகிறேன் என்று. எனக்கு எதுகை மோனையாகப் பேச வராது. சென்ற மக்களவைத் தேர்தல், அதற்கு முன்னர் கிராமசபைக் கூட்டத்தின்போதும் இதுபோன்றுதான் பேசினேன். மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். அது ஒரு கலந்துரையாடல் மாதிரி.

மக்களே சில விஷயங்களைப் பேசும்போது எடுத்துக் கொடுக்கிறார்கள். அதையும் இணைத்துப் பேசுகிறேன். சேப்பாக்கம் தொகுதியிலும் அதேபோல்தான் மக்களிடம் பேசுகிறேன்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம், இந்தத் தேர்தல் பிரச்சாரம். இதில் கூடுதலாக ஏதாவது உள்ளதா?

கடந்த முறை 30 நாள் இடைவெளி இருந்தது. அதன் பின்னர் பல இடங்களில் பேச முடிந்தது. இந்த முறை முதன்முதலில் நான்தான் நவம்பரில் பிரச்சாரத்தை ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் முதல் 10 நாட்கள் தொடர்ந்து கைது செய்தார்கள். பேச விடவில்லை. ஏப்ரல் இறுதியில் தேர்தல் இருக்கும் என சாதாரணமாக இருந்தேன். ஏப்ரல் 6-ம் தேதியே தேர்தல் என்பதால், இப்போது கூடுதலாக ஒரு நாளைக்கு 2,3 தொகுதிகள் பேசுகிறேன். சேப்பாக்கத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

சேப்பாக்கத்தில் என்ன வாக்குறுதி கொடுக்கிறீர்கள்?

இங்கு சாக்கடை, குடிநீர் பிரச்சினை, பட்டா பிரச்சினை உள்ளது. கண்டிப்பாகத் தேர்வு செய்யப்பட்டால் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவேன். முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்.

தேர்தலுக்குப் பின் திரைத்துறைக்குத் திரும்பும் எண்ணம் உள்ளதா?

நான் இப்போதும் திரைத்துறையில்தான் இருக்கிறேன். ரிட்டையர் ஆகிவிட்டு அரசியலுக்கு வரவில்லை. இப்பவும் 3,4 படங்கள் உள்ளன. அதைப் போய் முடிக்க வேண்டும். கண்டிப்பாக சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டால் கூடுதல் கவனம் என்னைத் தேர்வு செய்த மக்களுக்காகச் செய்வேன். சினிமா என் தொழில். அரசியல் எனக்குப் பிடித்தது.

இளம் வயதில் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ளீர்கள். அது உங்கள் தனிநபர் சுதந்திரத்தை பாதித்துள்ளதா?

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நான் சின்ன வயதிலிருந்தே ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்துள்ளேன். ஆயிரம் விளக்கில் நான் போகாத வீடே கிடையாது. அப்போதெல்லாம் இதுபோன்று செல்போன், ஊடகங்கள் போன்ற வசதிகள் கிடையாது. அதனால் பெரிதாக வரவில்லை.

நான் அப்போதிருந்தே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். சினிமாவுக்குப் போன பிறகு சில இடங்களில் பொதுவெளியில் சுதந்திரமாகப் போக முடியாது, அவ்வளவுதான். மற்றபடி நான் சுதந்திரம் போனதாக, விட்டுக்கொடுத்து வாழ்வதாக எல்லாம் நினைக்கவில்லை. நான் மனதுக்குப் பிடித்ததைச் செய்கிறேன். மனப்பூர்வமாகச் செயல்படுகிறேன்.

அப்பா ஸ்டாலின், தலைவர் ஸ்டாலின். எப்படிப் பார்க்கிறீர்கள்?

அப்பா ஸ்டாலினிடம் சில விஷயங்களை தைரியமாகப் பேசிவிடுவேன். தலைவர் ஸ்டாலினிடம் அப்படி எல்லாம் பேசிவிட முடியாது. பார்த்துத்தான் பேச வேண்டும். அந்தக் கண்டிப்பு எப்போதும், யாராக இருந்தாலும் அவரிடம் இருக்கும். தலைவர் ஸ்டாலின் நிரம்பக் கண்டிப்பானவர்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x