Published : 21 Mar 2021 03:15 AM
Last Updated : 21 Mar 2021 03:15 AM

என்ன செய்கிறார்கள் போக்குவரத்து போலீஸார்? - மதுரை அரசு மருத்துவமனை நுழைவுவாயிலில் ஆட்டோ ஓட்டுநர்கள் ‘அடாவடி’: மருத்துவமனைக்கு வருவோர் உள்ளே செல்ல முடியாமல் தவிப்பு

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு 3,500 உள் நோயாளிகள், 10 ஆயிரம் வெளி நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.

நோயாளிகள், அவர்களை பார்க்க வரும் பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர் கள் உள்பட ஒரு நாளைக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வளாகத்துக்குள் வந்து செல் கின்றனர். ஆனால், அவர்கள் வாகனங்களை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்துவதற்கு போதிய பார்க்கிங் வசதி இல்லை. அதனால், ஆங்காங்கே கிடைக்கிற இடங்களில் நோயாளிகள், பார்வை யாளர்கள், மருத்துவர்கள், செவி லியர்கள், மற்ற பணியாளர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.

மருத்துவமனைக்கு உள்ளேயே இப்படி ஆயிரம் பிரச்சினைகள் உள்ள நிலையில் மருத்துவமனை நுழைவுவாயிலில் எந்த வாகனமும் உள்ளேயும், வெளியேயும் வந்து செல்ல முடியாதபடி ஆட்டோ ஓட்டுநர்கள் அட்டகாசம் செய்கின்றனர். அவர்கள் ஆட்டோக்களை நுழை வுவாயில் முன் குறுக்கும், நெடுக்குமாக நிறுத்திக் கொண்டு மருத்துவமனையில் இருந்து வெளியே வருவோரை கூவிக் கூவி அழைக்கின்றனர். இதனால் மருத்துவமனைக்கு வாகனங்களில் வருவோர் எளிதாக சென்று வர முடியாமல் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் வாகனங்கள் மீது ஆட்டோ ஓட்டுநர்கள் மோதி விபத் துகளையும் ஏற்படுத்துகின்றனர். தற்போது மருத்துவமனையில் ரூ.250 கோடியில் கட்டுமானப் பணிகள் நடப்பதால் டீன், மருத்துவர்கள், பணியாளர்கள் வாகனங்கள் வந்து செல்லக்கூடிய மருத்துவமனையின் முதல் நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளது. அதனால் அனைத்து வாகனங்களுமே மருத்துவமனையின் பிரதான நுழைவு வாயில் வழியாக வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ஆனால் ஆட்டோ ஓட்டுநர்கள், காலை முதல் இரவு வரை மருத்துவமனை நுழைவு வாயில் முன் பயணிகளை ஏற்றுவதற்காக வரிசை கட்டி நிற்பதால் ஆம்புலன்ஸ் வாகனங்களும், நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்கு வரும் மருத் துவர்கள், செவிலியர்கள் நுழைவு வாயில் வழியாக எளிதாக வந்து செல்ல முடியவில்லை.

வேடிக்கை பார்க்கும் போலீஸார்

ஆட்டோ ஓட்டுநர்களின் அட்டகாசத்தையும், அவர்களின் விதிமீறல்களையும் போலீஸார் கண்டுகொள்வதில்லை. ஆட்டோக்களில் மூவருக்கு மேல் ஏற்றக்கூடாது என்ற கண்டிப்பான விதிமுறையுள்ளது. ஆனால் அரசு ராஜாஜி மருத்துவமனை சாலை, மாட்டுத்தாவணி பஸ் நிலைய சாலைகளில் ஆட்டோ ஓட்டுநர்கள், தங்கள் இருக்கையில் ஒருவர், வலது, இடது புற கம்பிகளில் தலா 2 பேர், மேற்புற இருக்கையில் மூவர், கீழ் இருக்கையில் மூவர் என 10 பேர் வரை ஆட்டோக்களில் ஏற்றிக் கொண்டு பறக்கின்றனர். அவர்கள் மீது போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுக்க தயங்குவதால் தற்போது மருத்துவமனை முன்பும் தங்கள் அட்டகாசத்தை தொடங்கியுள்ளனர்.

மருத்துவமனை சாலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதோடு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், இதர பணியாளர்களை தினமும் தொந்தரவு செய்து மன உளைச்சலை ஏற்படுத்துகின்றனர். சில நேரங்களில் வாகனங்கள் மீது மோதி சேதத்தையும் ஏற்படுத்துகின்றனர். மாவட்ட போக்குவரத்து போலீஸார் உயர் அதிகாரிகள் இந்த பகுதியை ஆய்வு செய்து ஆட்டோ ஓட்டுநர்களின் விதிமுறை மீறல்களுக்கு முடிவுகட்ட வேண்டும். அல்லது போலீஸார் காலை முதல் சாலையில் நின்று போக்குவரத்தை சரி செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x