Last Updated : 20 Mar, 2021 06:09 PM

 

Published : 20 Mar 2021 06:09 PM
Last Updated : 20 Mar 2021 06:09 PM

கற்பனைகளை தேர்தல் அறிக்கையாக அதிமுக வெளியிட்டுள்ளது: நெல்லையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

திருநெல்வேலி

நிறைவேற்ற முடியாத கற்பனைகளை தேர்தல் அறிக்கையாக அதிமுக வெளியிட்டுள்ளதாக திருநெல்வேலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக சார்பில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் ஏ.எல்.எஸ். லட்சுமணன், பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிடும் அப்துல் வகாப், அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடும் ஆவுடையப்பன், ராதாபுரம் தொகுதியில் போட்டியிடும் மு. அப்பாவு, நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் ரூபி மனோகரன் ஆகிய 5 வேட்பாளர்களை அறிமுகம் செய்து திருநெல்வேலி டவுன் வாகையடி முனை பகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

தவழ்ந்து, ஊர்ந்துபோய் முதல்வர் பதவிக்கு பழனிசாமி வந்ததாக நான் குறிப்பிட்டது, அவரை அவமானப்படுத்துவதற்காக இல்லை. நடந்ததை சொன்னேன்.

அனைவரும் சமூக வலைதங்களில் அதை பார்த்துள்ளார்கள்.அதை நான் சொன்னதுக்காக முதல்வருக்கு கோபம் வந்துவிட்டது. தவழ்ந்துபோனது உண்மையா என்பதை மக்கள் சொல்கிறார்கள். இதை சொன்னதற்காக என் மீது வழக்கு போடுங்கள். அந்தக் காட்சியை பார்த்தவர்கள் அத்தனைபேர் மீதும் வழக்கு போடுங்கள். நான் ஊர்ந்து போவதற்கு பாம்பா, பல்லியா என்று முதல்வர் கேட்டுள்ளார். விஷப்பாம்பு, பல்லி விஷத்தைவிட துரோகம் என்ற விஷம்தான் பெரிய விஷம். யாரால் பதவிக்கு வந்தாரோ அவருக்கே துரோகத்தை செய்தவர் பழனிசாமி. ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர், இப்போது அதிமுகவுக்கு துரோகம் செய்கிறார்.

அதிமுக பாஜகவின் கிளை கழகமாக மாறிவிட்டது.

வழக்குகள் வாபஸ் பெறப்படும்

தேர்தல் வருவதையொட்டி பல்வேறு வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவிக்கிறார். ஆனால் கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான தேச துரோக வழக்கை ரத்து செய்தீர்களா. உதயகுமார், புஷ்பராஜ், முகிலன் ஆகியோர் மீதான வழக்குகளை வாபஸ் வாங்கினீர்களா. 2011 முதல் எமர்ஜென்சி காலத்தைப்போல் அப்பகுதியை ஆளுங்கட்சியினர் உருவாக்கி வைத்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் கூடங்குளம் போராட்ட வழக்குகள், தேச துரோக வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும்.

இப்போது நாளுக்குநாள் விலைவாசி விஷம்போல் ஏறிவருகிறது. அதை குறித்து அதிமுக, பாஜக அரசுகள் கவலைப்படவில்லை. ஆனால் பழனிசாமியும், மோடியும் மக்கள் மீது வரிகளை போடுகிறார்கள். ரேஷன் கடைகளில் தரமில்லாத பொருட்களை மக்கள் தலையில் கட்டுகிறார்கள். தமிழகத்தில் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை தவிர்த்து தேவையில்லாத பொருட்களை மக்கள் தலையில் கட்டுகிறார்கள் என்று ரேஷன் கடை பணியாளர்கள் அமைப்பே குற்றஞ்சாட்டியிருக்கிறது.

முதல்வர் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது என்மீது குற்றஞ்சாட்டுகிறார். மக்களைக் குழப்பி வெற்றிபெற ஸ்டாலின் சதி செய்வதாக சொல்கிறார். மக்களை நான் குழப்பவில்லை. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் கடந்த 10 ஆண்டுகள் சீரழிவை சரி செய்யமுடியும் என்று மக்கள் கருதுகிறார்கள்.

தமிழகத்தில் அதிமுகவை மட்டுமில்லை, பாஜகவையும் உள்ளே விடக்கூடாது. இது தமிழ்நாடு, தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் வாழ்ந்த மண். எந்தக் காலத்திலும் பாஜகவை உள்ளே விடக்கூடாது.

மதசார்பற்ற அணி வேட்பாளர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு வாக்களித்தால் அது யாருக்கு சாதகமாகும் என்பதை மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். மதச்சார்பற்ற அணிக்கு வாக்குகளை அளிக்க வேண்டும்.

திமுக ஆட்சியில் நிலமற்ற ஏழைகளுக்கு இலவசமாக நிலம் தரப்படவில்லை என்று முதல்வர் பொய் சொல்கிறார். இவ்வாறு சொல்பது முதல்வருக்கு அழகல்ல. 2006-ல் 1,89,719 ஏக்கர் நிலத்தை வழங்கி திமுக ஆட்சியில் கொடுத்துள்ளோம். இதை முதல்வர் மறுக்கத் தயாரா

2016, 2019 தேர்தல்களின்போதும், இப்போதும் அதிமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்கிறார்கள். ஆனால் கடந்த காலங்கலில் அதற்கான முயற்சியையே அவர்கள் மேற்கொள்ளவில்லை.

தற்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் யாராலும் செய்ய முடியாததை சொல்லியிருக்கிறார்கள். குடும்பத்துக்கு ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு என்று தெரிவித்திருக்கிறார்கள். எப்படிப்பட்ட கற்பனை. அதை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்கள்.

தமிழகத்தில் 1.97 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. அத்தனை பேருக்கு வேலை கொடுக்க முடியுமா. நடக்கவே நடக்காது. திமுக தேர்தல் அறிக்கை ஹிரோ, அதிமுக தேர்தல் அறிக்கையோ வில்லன், காமடி வில்லன்.

இது திராவிட மண். மோடி மஸ்தான் வேலைகள் எடுபடாது என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x