Published : 20 Mar 2021 04:52 PM
Last Updated : 20 Mar 2021 04:52 PM

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் குறித்து விமர்சனம்; ஸ்டாலின், உதயநிதி மீது தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்

உதயநிதி - ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்குக் களங்கம் ஏற்படுத்துகின்ற வகையில் பேசி வருவதாக, ஸ்டாலின், உதயநிதி மீது அதிமுக சார்பில் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அதிமுக செய்தித் தொடர்பாளரும், அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளருமான பாபு முருகவேல் இன்று (மார்ச் 20) தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவுக்கு அனுப்பிய புகார் மனு:

"திமுக தலைவர் ஸ்டாலினும், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாகவும், மறைந்த தலைவர்களின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதத்திலும் மக்களிடையே உண்மைக்கு மாறான கருத்துகளைக் கூறி, துவேஷத்தைத் தூண்டுகின்ற விதத்திலும் பேசி வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் 19.3.2021 அன்று தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் திமுக வேட்பாளருக்கு வாக்குச் சேகரித்து பேசுகின்றபோது தேர்தல் விதி மீறலாகவும், மறைந்த தலைவரின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும், இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டனை தரக்கூடிய வகையிலும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை ஒட்டிய நீதி விசாரணைக்காக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தின் விசாரணை நடைமுறைக்குக் குந்தகம் ஏற்படுத்தும் விதத்திலும், விசாரணை ஆணையத்தைக் கொச்சைப்படுத்தும் விதத்திலும் தொடர்ந்து பேசி வருகிறார்.

20.3.2021 அன்று ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டம், தக்களையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை விமர்சிக்கின்ற விதமாக, 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டறிய அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையம் ஒன்றும் செய்யாது. அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. விசாரணை 4 வருடமாக நடைபெறுகிறது' என விசாரணை ஆணையத்தை விமர்சிக்கின்ற விதமாகத் தொடர்ந்து பேசிவருகிறார்.

இவ்வாறான பேச்சானது நீதிமன்ற அவமதிப்பு மட்டும் அல்லாமல், பொதுமக்களிடையே தவறான எண்ணங்களைப் பரப்பி அதன்மூலம் தேர்தல் ஆதாயம் அடையும் நோக்கத்தோடு செயல்படுவதாகும்.

எனவே, மேற்படி தொடர் தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டு வரும் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது, தேர்தல் நடத்தை விதிகளின்படியும், மறைந்த தலைவரின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்துதலுக்கான இந்திய தண்டனைச் சட்டத்தின்படியும், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்குக் களங்கம் ஏற்படுத்துகின்ற நோக்கத்திற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் பதிவு செய்து, தேர்தல் ஆணையம் இருவருக்கும் உடனடியாக அறிவுறுத்தல் ஆணை அனுப்பி இனி இதுபோன்ற அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தும்படியும் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு பாபு முருகவேல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x