

இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட நான்கு மீனவர்களின் குடும்பங்களுக்குப் போதுமான இழப்பீடு வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மீனவர்கள் பாதுகாப்பு அமைப்பு தலைவர் பீட்டர் ராயன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “கடந்த ஜனவரி 18-ம் தேதி கச்சத்தீவு பகுதியில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த மெசைய்யா, நாகராஜ், சாம், செந்தில் குமார் ஆகிய மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி அத்துமீறி வந்த இலங்கை கடற்படையினர், மீன்பிடிப் படகு மீது மோதி, படகைக் கடலில் மூழ்கடித்தனர்.
இதனால் கடலில் மூழ்கி பலியான நான்கு மீனவர்களின் குடும்பங்களுக்கும் போதுமான இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, ஆள் மாயம் என வழக்குப் பதிவு செய்த திருப்புன்னவாசல் போலீஸார், இலங்கை கடற்படையினருக்கு எதிராக எந்தக் குற்ற நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில், வரும் மார்ச் 22-ம் தேதி (திங்கட்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது.