தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை பாக் ஜலசந்தி கடலை நீந்தி சியாமளா கோலி சாதனை: முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார்

தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை பாக் ஜலசந்தி கடலை நீந்தி சியாமளா கோலி சாதனை: முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார்
Updated on
1 min read

தெலங்கானாவைச் சேர்ந்த சியாமளா கோலி இலங்கையிலுள்ள தலைமன்னார் முதல் தமிழகத்திலுள்ள தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 13 மணி நேரம் 40 நிமிட நேரத்தில் நீந்தி கடந்து சாதனை புரிந்தார்.

இந்திய அளவில் நடைபெற்ற பல்வேறு நீச்சல் போட்டிகளில் வெற்றிபெற்றவர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த அனிமேசன் இயக்குநர் சியாமளா கோலி (48). இவர், தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடல் பகுதியை நீந்திக் கடப்பதற்காக டெல்லியில் உள்ள வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை அமைச்சகங்கள் மூலம் இலங்கை தூதரக அனுமதி பெற்றார். இதைத்தொடர்ந்து ராமேசுவரம் சங்குமால் கடற்கரையிலிருந்து தலைமன்னாருக்கு 2 படகுகளில் சியாமளா கோலி, அவரது பயிற்சியாளர், மீனவர்கள் உட்பட 13 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் காலை புறப்பட்டுச் சென்றனர்.

நேற்று அதிகாலை தலைமன்னாரில் சியாமளா கோலியின் சாதனை நிகழ்ச்சியை இலங்கை வட மாகாண சபையின் அவைத் தலைவர் வி.கே.சிவஞானம், இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் செயலாளர் இளங்கோவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தலைமன்னாரிலிருந்து பாக் ஜலசந்தி கடல் பகுதியில் அதிகாலை 4.05 மணிக்கு நீந்தத் தொடங்கிய சியாமளா கோலி, 30 கி.மீ. தூரத்தைக் கடந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு மாலை 5.45 மணிக்கு வந்தடைந்தார். 13 மணிநேரம் 40 நிமிடத்தில் பாக் ஜல சந்தி கடலை கடந்தார்.

இதன் மூலம் பாக் ஜலசந்தியை நீந்திக் கடந்த 13-வது நபர், உலகளவில் இரண்டாவது பெண், இந்திய அளவில் முதல் பெண் என்ற பெருமையை சியாமளா கோலி பெற்றார்.

இது குறித்து ‘தி இந்து’ செய்தியாளரிடம் சியாமளா கோலி கூறியதாவது:

கடந்த ஆண்டே பாக் ஜலசந்தியை நீந்திக் கடப்பதற்கு இந்திய-இலங்கை அரசுகளிடம் அனுமதி கிடைத்தது. ஆனால் கரோனா பரவல் காரணத்தால் அப்போது சாதனையை நிகழ்த்த முடியாமல் போனது. தலைமன்னாரில் நீந்தத் தொடங்கியதிலிருந்து முதல் 5 மணி நேரத்தில் நீந்துவதற்கு நன்றாக இருந்தது. அதன் பிறகு சற்று கடினமானதாக இருந்தது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in